ஸ்டாலின் திடீர் விசிட்.. நெகிழ்ந்த அருந்ததியர்கள் - ”சேர்ல உக்காருங்க தம்பி” பாசமாக சொன்ன முதல்வர்
நாமக்கல்: நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டுக்காக பயணித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருந்ததியர் காலனிக்கு சென்று அரசு பற்றியும், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நாமக்கல் பொம்மைகுட்டை மேட்டில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது.
காலை 9:30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுபெறும் இந்த மாநாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் சென்றுள்ளார்.
மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்.. திருப்பதி தேவஸ்தானத்திடன் ரூ.16 கோடி கேட்கும் ஆந்திர அரசு
கலைகட்டும் நாமக்கல்
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளின் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், நகராட்சி துணைத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், பேரூராட்சி துணைத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்காக இன்றே பலரும் நாமக்கல் நோக்கி புறப்பட்டு விதமாக உள்ளனர்.
ஸ்டாலினுக்கு வரவேற்பு
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்பாக அண்டை மாவட்டமான கரூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பரமத்திவேலூர் காவேரி பாலம் வழியாக நாமக்கலுக்கு அவர் சென்றார். அங்கு கீரம்பூர் சுங்கச்சாவடிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அருந்ததியர் காலனி
அங்கிருந்து முதலமைச்சர் தங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகை வரை 6 கிலோ மீட்டர் தூரம் வரை தொண்டர்கள் வழிநெடுக சாலையோரம் நின்று உற்சாக வரவேற்பு வழங்கினர். இந்த நிலையில் மாலை நாமக்கல் சிலுவம்பட்டியில் உள்ள அருந்ததியர் காலனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு வீதிகளில் அருந்ததியர் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கருத்து கேட்பு
அங்குள்ள படித்த இளைஞர்களை சந்தித்து ஆட்சி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார். அவர்கள் செய்யும் வேலைகள் குறித்தும் அங்கிருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன் அங்குள்ள ஏழை எளிய மக்களை சந்தித்தும் குறைகளை அவர் விசாரித்தார். அப்போது ஒரு வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த இளைஞரிடமும் பெண்ணிடம் பேசினார். அப்போது நின்றுகொண்டே இருந்த இளைஞரிடம் நாற்காலியில் அமருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். முதலமைச்சரின் இந்த திடீர் வருகையால் மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.