வாஜ்பாயை மறந்துவிட்டு குஜராத் ஸ்டேடியத்துக்கு மோடி பெயரை சூட்டியது ஏன்?அண்ணாமலைக்கு திமுக MP கேள்வி!
நாமக்கல்: வாஜ்பாய் பெயரை சூட்டாமல் குஜராத் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி பெயரை சூட்டியது ஏன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி வரும் அண்ணாமலை, கடந்த 2 நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு ''நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை'' பெயரை சூட்டாமல் கருணாநிதி பெயரை சூட்டவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது ஏன் என வினவினார்.

அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார், வர வர அண்ணாமலை என்ன பேச வேண்டும், எதை பேச வேண்டும் என்பது தெரியாமலேயே பேசி வருகிறார் என்றும் இதே போன்று பேசிக்கொண்டிருந்தால் அவர் மீதான நம்பகத்தன்மையே இருக்காது என்றார். ஒரு இயக்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள ஒருவர் எந்த உண்மையும் தெரியாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது முறையல்ல என திமுக எம்.பி. ராஜேஷ்குமார் சாடினார்.
மேலும், சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து நாமக்கல்லை தனி மாவட்டமாக கொண்டுவந்தவர் கருணாநிதி என்றும் சென்னையில் நாமக்கல் கவிஞர் மாளிகை என பெயர் சூட்டியவரே கருணாநிதி தான் என்றும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு எந்தளவுக்கு சிறப்பு சேர்க்க முடியுமோ அந்தளவுக்கு சிறப்பு சேர்த்தக்கட்சி திமுக எனவும் தெரிவித்தார். வாஜ்பாய் உட்பட எத்தனையோ பாஜக மூத்த தலைவர்களை மறந்துவிட்டு குஜராத் ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி பெயரை சூட்டியது ஏன் என அண்ணாமலையிடம் ராஜேஷ்குமார் எம்.பி. வினவினார்.
குஜராத் ஸ்டேடியம் பெயர் விவகாரத்தை விட்டுவிட்டு நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பினார். அண்ணாமலையை பொறுத்தவரை தென் மாவட்டங்கள் முழுவதும் தனது பாதயாத்திரையை முடித்துவிட்டு தற்போது மேற்கு மண்டலத்திலும் பாதயாத்திரையை நிறைவு செய்யவுள்ளார். அடுத்ததாக மத்திய மண்டலத்தில் பாதயாத்திரையை தொடங்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications