நிறைய கடன் இருக்கு.. விஷம் குடிச்சு செத்து போயிடலாமா.. மகளிடம் கேட்ட தந்தை.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது
திருச்செங்கோடு: "கடன் நிறைய இருக்கு.. அடைக்க முடியல.. செத்து போயிடலாமா.." என்று பெற்ற மகளிடம் கேட்டதுடன், ஒரு குடும்பமே விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், கூத்தம்பூண்டி சாயக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன். 54 வயதுடைய இவர், ரிக் வண்டி உரிமையாளர் ஆவார். இவரது மனைவி பெயர் நிர்மலா. நவீன்குமார் என்ற 24 வயது மகனும், சௌம்யா என்ற 21 வயது மகளும் உள்ளனர்.
மகன் நவீன்குமார் மகாராஷ்டிராவிலேயே தங்கி இருந்து ரிக் தொழிலை கவனித்து வருகிறார். சௌம்யா கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் முதல் வருடம் படித்து வந்தார்.
ரிக் வண்டி
கொஞ்ச காலமாகவே மோகனுக்கு ரிக் வண்டி தொழிலில் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அதனால் நஷ்டத்தை ஈடுகட்ட பெரிய அளவில் ஒரு மளிகை கடையை நடத்தினார். இதற்கும் மோகன் கடன் வாங்கினார். இதிலும் நஷ்டம் வந்தது. அதனால், நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தார். அதிலும் வருமானம்இல்லை.. அதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
கடன் தொல்லை
இந்த சமயத்தில் பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்கவும், நிதி நிறுவனத்தை அவர்களிடம் தந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் மேலும் மனமுடைந்த மோகன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.
விஷம் அருந்தினர்
அதனால் காலேஜ் லீவில் வீட்டுக்கு வந்திருந்த மகள் செளமியாவிடம் தற்கொலை பற்றி சொல்லி உள்ளார். பிறகு மோகன், நிர்மலா, சௌமியா 3 பேருமே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். 3 பேருக்குமே மயக்கம் வந்தது.. அந்த சமயத்தில், மோகன் தனது தம்பி அன்பழகனுக்கு போன் செய்து, விஷத்தை குடித்துவிட்டோம்.. நாங்கள் இறந்ததும் நியே வந்து இறுதிசடங்கை செய்துவிடு என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார்.
நிர்மலா
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பழகன் ஓடிச்சென்று, மோகன் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால், நிர்மலா இறந்து கிடந்தார். மோகனும், சௌம்யாவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது மோகன் இறந்துவிட்டார். சௌமியாவும் சிகிச்சை பலனின்றி கொஞ்ச நேரத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மகனுக்கு தகவல் சொல்லப்பட்டது.
தற்கொலை
போலீசார் தகவலறிந்து விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், "எங்கள் தற்கொலைக்கு யாருமே காரணம் இல்லை. கடன் சுமை அதிகமாகிவிட்டது. அதை அடைக்க முடியவில்லை.. என் மகனிடம் யாரும், எதையும் கேட்க வேண்டாம். அவன் விருப்பப்படி வாழட்டும்" என்று எழுதியிருந்தார். கடன் தொல்லைக்காக குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்தி வேலூர் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.