லண்டனில் வசிப்பவர் பெயரில் பயிர்க்கடன்! வசமாக சிக்கிய அதிமுக நிர்வாகி! ஆதாரம் திரட்டிய திமுக எம்.பி!
நாமக்கல்: லண்டனில் வசிப்பவர் பெயரில் இரண்டு முறை பயிர்க்கடன் பெற்ற மோசடி நிகழ்வு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அரங்கேறியுள்ளது.
மோகனூர் ஒன்றிய அதிமுக அவைத்தலைவரும் ஆரியூர் கூட்டுறவு வங்கித்தலைவருமான ஏ.சி.மணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் திமுக எம்.பி.ராஜேஷ்குமார்.
ஏற்கனவே கூட்டுறவுத்துறையில் நகைக்கடன் மோசடி, கடன் வழங்கியதாக கூறி பெண் அதிகாரி செய்த ஒரு கோடி ரூபாய் பண மோசடி என பலக் குற்றச்சாட்டுகள் உள்ள உள்ள நிலையில், இப்போது இந்தியாவிலேயே இல்லாத ஒருவர் பெயரில் பயிர்க்கடன் வழங்கிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றிய அதிமுக அவைத் தலைவராகவும், ஆரியூர் கூட்டுறவு வங்கித் தலைவருமாகவும் இருப்பவர் ஏ.சி.மணி. இவர் லண்டனில் வசித்துவரக் கூடிய சுப்ரமணியம் என்பவரது பெயரில் இரண்டு முறை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்று அந்த இரண்டு கட்னகளையும் தள்ளுபடி செய்ய வைத்துள்ளார். கூட்டுறவு சங்க உறுப்பினர் எண் 1,183 படி கடந்த 2019 - 20 -ல் வெளிநாட்டில் இருக்கக்கூடிய சுப்ரமணியம் பெயரில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வாங்கியுள்ளார் அதிமுக நிர்வாகி ஏ.சி.மணி.

பயிர்க்கடன்
ருசி கண்ட பூனை விடாது என்பது போல் மீண்டும் 2021-ம் ஆண்டு அதே சுப்ரமணியத்தின் பெயரில் போலி கையெழுத்திட்டு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பயிர்கடன் பெற்றுள்ளார் ஏ.சி.மணி. அந்த பயிர்க்கடனும் தள்ளுபடி ஆகியுள்ளது. இதுவரை கவரிங் நகைகளை அடகு வைத்து நகை கடன் மோசடி செய்ததாக தான் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனிடையே முதல்முறையாக நாட்டிலேயே இல்லாத ஒருவர் பெயரில் பயிர்க்கடன் வழங்கப்பட்டிருக்கும் விநோதம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திமுக எம்.பி.
இது தொடர்பான மோசடி ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், அதிமுக நிர்வாகி ஏ.சி.மணி மீது நடவடிக்கை கோரி எங்கெங்கு புகார்களை அனுப்ப வேண்டுமோ அங்கங்கு புகார்களை அனுப்பிவிட்டார். இதனால் இது தொடர்பான விசாரணை தீவிரமடையும் எனத் தெரிகிறது. திமுக எம்.பி.ராஜேஷ்குமார் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூட, இது போன்ற முறைகேடுகளில் தமிழகம் தழுவிய அளவில் அதிமுகவினர் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதுவதாகவும் கூட்டுறவுத்துறையை பற்றி பேச அதிமுக தலைமைக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குவியும் புகார்கள்
லண்டனில் வசிப்பவர் பெயரில் இரண்டு முறை பயிர்க்கடன் பெற்று அதிமுக பிரமுகர் மோசடி செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக கூறும் திமுக எம்.பி.ராஜேஷ்குமார், நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த கூட்டுறவு சங்க முறைகேடுகள் தொடர்பாக தனக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications