உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்.. பாஜக குறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு
நாமக்கல்: தமிழகத்தைப் பொருத்தவரையில் உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கையின் படி மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஆதரவளிப்பார் எனவும் மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் அதை எதிர்ப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாநில இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயிலுக்கு உட்பட்ட செல்லாண்டி அம்மன் திருக்கோவில் நிலத்தைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து நைனாமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அமைக்கப்பட உள்ள மலைப்பாதை பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங், பாராளுமன்ற உறுப்பினர் இராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆன்மீகவாதிகளுக்கு அரவணைப்பு
மேலும் இராசிபுரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்கள் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைமையிலான இந்த அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஆன்மீகவாதிகளை அரவணைத்து செல்கிறது எனவும், அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் நள்ளிரவு 12 மணிமுதல் புத்தாண்டு வழிபாடுகளுக்கு அரசு அனுமதி வழங்கியது என கூறினார்.

நகைகள் உருக்கும் பணி
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு செய்ய வேண்டிய கோவில்களைக் கண்டறிந்து குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறிய அமைச்சர் சேகர் பாபு, திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோவில்களில் உள்ள தங்க நகைகளை பிரிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது எனவும், நீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் அறங்காவலர் குழு நியமித்து மத்திய அரசின் உருக்கு ஆலைக்கு எடுத்து செல்லப்பட்டு நகைகளை உருக்கும் பணி நடைபெறும் என கூறினார்.

வேட்டை தொடரும்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் 437 நபர்களிடம் இருந்து 1,640 கோடி ரூபாய் அளவிற்கு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன எனவும், கோவில் நிலங்களை மீட்கும் வேட்டை தொடரும் என தெரிவித்த அவர், 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை கோவில்களில் அர்ச்சகர்களாக அமைக்கலாம் என வழிகாட்டியுள்ளதைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 24 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் வழங்கி உள்ளார் எனவும், அர்ச்சகர், வேத பாராயணல், இசை உள்ளிட்ட பள்ளிகளை மேம்படுத்தவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

உறவுக்கு கை உரிமைக்கு குரல்
தமிழகத்தைப் பொருத்தவரையில் உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கையில், மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஆதரவளிப்பார் எனக் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் அதை எதிர்ப்பார் எனவும், தமிழகத்தின் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பாஜக தலைவர் செயலாற்ற வேண்டும் , நடக்கின்ற நலத்திட்ட பணிகளுக்கு தடைக்கல்லாக இல்லாமல் படிக்கல்லாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications