சும்மா தலையை மட்டும் ஆட்டாதீங்க! வாயை திறந்து பேசுங்க! அதிகாரிகளை வெளுத்து வாங்கிய இளம் அமைச்சர்!
நாமக்கல்: சும்மா தலையை மட்டும் ஆட்டாமல், வாயை திறந்து பேசுமாறு அதிகாரிகளை வெளுத்து வாங்கியிருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்.
அமைச்சரின் இந்த கண்டிப்பை சிறிதும் எதிர்பார்க்காத நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அவர் கேட்கும் விளக்கத்தை அளித்தனர்.
எப்போதுமே மிஸ்டர் கூலாக இருக்கக் கூடிய இந்த இளம் அமைச்சரை டென்ஷன் ஆக்கிய நிகழ்வின் விவரம் வருமாறு;
அதிமுக புள்ளியின் திடீர் விலகல் - குடைச்சல் கொடுத்த அமைச்சர் உறவினர்.. எல்லாமே அந்த 'சேகர்’ கையில்!?
ராசிபுரம் நகராட்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில், அரசினர் நடுநிலைப்பள்ளிக்கு பூமி பூஜை நடத்தச் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து தனது குறைகளை கூறினார். கடந்த வாரம் குடிநீர் குழாய் உடைந்ததால் தனது வீட்டிற்குள் தண்ணீர் வருவதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முறையிட்டார்.
அதிகாரிகள் கப்சிப்
இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகள் யாரும் வாயே திறக்காமல் நமக்கென்ன வென்று நின்று கொண்டிருந்தனர். இதனால் டென்ஷன் ஆன அமைச்சர் மதிவேந்தன், ''அட வாயை திறந்து தான் பேசுங்களேன், இந்தம்மா தான் இவ்வளவு தூரம் சொல்றாங்களே, கேட்டும் கேட்காதது மாதிரி நிற்கிறீங்க'' என ஆபிசர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். மேலும், ''சும்மா தலையை மட்டும் ஆட்டாமல் பிராக்டிகலாக என்னனென்ன பிரச்சனை உள்ளது என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்க'' என அட்வைசும் செய்தார்.
மிஸ்டர் கூல்
அமைச்சரிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகு விழுந்து அடித்துக் கொண்டு புகார் கூறிய மூதாட்டி வீட்டுக்கு சென்று குடிநீர் குழாய் உடைப்பு பற்றி அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனிடையே பூமி பூஜையை முடித்த கையோடு அமைச்சர் மதிவேந்தனும் அந்த மூதாட்டி வீட்டுக்கு விசிட் அடித்து உடைந்த குடிநீர் குழாயை மாற்றித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எப்போதுமே மிஸ்டர் கூலாக இருக்கக் கூடிய இந்த இளம் அமைச்சரை, டென்ஷன் ஆக்கியது அதிகாரிகளின் மவுனம் தான்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்திற்கும் அதிகாரிகளுக்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை, சில நாட்களுக்கு முன்னர் தான் குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ஒருவரை அமைச்சர் கே.என்.நேரு சரமாரியாக வெளுத்து வாங்கியிருந்தார். இப்போது அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரம் நகராட்சி அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்.