“விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே தவெக கூட்டணியில் இணைய முடியும்” - செங்கோட்டையன்
நாமக்கல்: "தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும். 2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம்" என செங்கோட்டையன் தெரிவித்துர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயர்மட்ட குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

திருச்செங்கோட்டில் இன்று பேசிய செங்கோட்டையன், "அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் தவெகவில் இணைகிறார்கள். NDA கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் ஊகிக்க முடியாது, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தவெகவிற்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது. போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது, மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார். தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு விஜய்யை விட்டால் யாருமில்லை. இளைஞர்களைத் தட்டியெழுப்பும் ஆற்றம் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது.
2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம். தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும். இதுவே நமது லட்சியப் பயணம். சேர வேண்டிய இடத்தில் நான் சேர்ந்திருக்கிறேன்" என செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்செங்கோடு சட்டசபை தொகுதி தவெக வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் தேர்வாகி இருக்கிறார் என்றும் அவரை இன்று தவெக தலைமை வேட்பாளராக அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவின. இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருச்செங்கோட்டில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் விஜய்யால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களை விஜய் களமிறக்குவார்." எனத் தெரிவித்தார்.
கரூர் துயரச் சம்பவத்திற்கு பின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நிறுத்திய தவெக தலைவர் விஜய், இரண்டு மாதங்களுக்கு பிறகு அண்மையில் புதுச்சேரியில் திறந்தவெளியில் மக்கள் சந்திப்பை நடத்தினார். வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் விஜய் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications