ஹெல்மெட் இல்லையா.. அப்போ நோ என்ட்ரி.. நாமக்கல் காவல்துறை அதிரடி!
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹெல்மெட் அணியாமல் வந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாதவர்கள் மெயின் கேட் வழியாக நுழைய தடை விதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசு தலைமையில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மெயின் கேட்டில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது நோ ஹெல்மெட், நோ என்ட்ரி என்ற என்ற பதாகை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த சோதனையின்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பிரதான நுழைவு வாயிலில் நுழைவதற்கு தடை விதித்தனர்.
இதேபோல் காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று தலைக்கவசம் அணிந்து வந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்தவர்களை சீட் பெல்ட் அணிந்த பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அரசின் சட்டங்களை முதலில் அரசுப் பணியில் உள்ள அரசு அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும், இதைப்பார்த்து பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து தாமாகவே ஹெல்மெட் அணிந்து வருவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications