25 இளைஞரணி நிர்வாகிகளுக்கு ராயல் என்ஃபீல்டு புல்லட் வாங்கிக் கொடுத்த திமுக மாவட்டச் செயலாளர்!
நாமக்கல்: திமுக இளைஞரணி நிர்வாகிகள் 25 பேருக்கு சொந்தமாக ராயல் என்ஃபீல்டு புல்லட் வாங்கிக் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார்.
பொதுவாக தீபாவளி நேரத்தில் ஊழியர்களுக்கு முதலாளி பைக் வாங்கிக் கொடுத்தார், கார் வாங்கிக் கொடுத்தார் என்ற செய்திகளை பார்த்திருப்போம். ஆனால் அரசியல் களத்தில் முதல்முறையாக கட்சி நிர்வாகிகளுக்கு புல்லட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.

ஒரு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் புல்லட்டின் விலை, நம்பர் பதிவு, வரி உட்பட ஆன் ரோடு விலையாக இரண்டரை லட்சம் ரூபாய் வருகிறது. 25 புல்லட் என்கிற போது மொத்தம் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் வருகிறது. இளைஞரணி நிர்வாகிகள் ஆக்டிவாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டால் அவர்களுக்கும் இது போன்ற பரிசுகள் வரும் காலத்தில் வழங்கப்படும் என்பதை உணர்த்துவதற்காகவும் ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கியுள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் எந்த திமுக மாவட்டச் செயலாளரும் செய்யாத காரியம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்பட்சம் ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டர், டிவிஎஸ் XL போன்ற வாகனங்களை தான் ஐந்தாறு பேருக்கு தேர்தல் நேரத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். ராஜேஷ்குமார் எம்.பி. மட்டும் தான் இவ்வளவு காஸ்ட்லியான இரு சக்கர வாகனத்தை இளைஞரணி நிர்வாகிகள் 25 பேருக்கு அவர்கள் பெயர்களிலேயே வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து மறைந்த அருணகிரி என்பவாது குடும்பத்தினர் எந்தக் காலத்திலும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவர்கள் பெயரில் ரூ.10 லட்சம் வங்கியில் வைப்பு நிதி செலுத்தி அதன் மூலம் மாதம் ரூ.6,000 வட்டி பெற்றுக்கொள்ளுமாறு உதவியுள்ளார். இதனால் தான் நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த உதயநிதி ஸ்டாலின், ராஜேஷ்குமார் எம்.பி.யை பாராட்டு மழையில் நனைத்து விட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications