குழந்தைகளை விற்று லட்சக்கணக்கில் குவித்த அமுதா, கணவர்.. வங்கிகளில் குவிந்த பணம்!
குழந்தைகளை விற்ற அமுதாவின் வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
Recommended Video
நாமக்கல்: "ஆண் குழந்தை வேணுமா, பெண் குழந்தை வேணுமா?, கருப்பு கலர் குழந்தை வேணுமா? சிவப்பு நிற குழந்தை வேணுமா" என்று பேரம் பேசிய அமுதாவிடம் வங்கிக் கணக்கில் அதிக நிறைய பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் தொடர்புடைய டிரைவர் முருகேசன், நர்ஸ் பர்வீனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கில் பணம் குவிந்ததும் தெரிய வந்துள்ளது.
ராசிபுரத்தில் கடந்த 30 வருஷமாக குழந்தைகளை விற்பனை செய்கிறேன் என்று ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா பேசிய ஆடியோ ஒன்று வைரலானது.
"ஆண் குழந்தை வேணுமா, பெண் குழந்தை வேணுமா?, கருப்பு கலர் குழந்தை வேணுமா? சிவப்பு நிற குழந்தை வேணுமா" என்று பேரம் பேசும் ஆடியோதான் அது! முன்பணம் தந்தால் உடனே குழந்தை கிடைக்கும்.. கருப்பு கலர் குழந்தைக்கு ஒரு விலை.. சிவப்பு கலர் குழந்தைக்கு ஒரு விலை என்று அந்த ஆடியோ விவரம் அறிந்ததும் தமிழக மக்கள் அதிர்ந்தனர்.
வாக்குமூலம்
இதுகுறித்து அமுதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அமுதா, உடந்தையாக இருந்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். அமுதாவை அழைத்து சென்று ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை
இதனிடையே, நாமக்கல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் தகவல்களை ஆய்வு செய்ய ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு தனியாக விசாரணை நடந்தது.
டிரைவர் கைது
இதன் அடிப்படையில், அமுதாவுக்கு உதவியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொல்லி மலையை சார்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், பிரைவேட் ஆஸ்பத்திரி நர்ஸ் பர்வீன் ஆகியோர்தான்!
டிரைவர் வாக்குமூலம்
அப்போது முருகேசன் இது சம்பந்தமாக சொல்லும்போது, கொல்லிமலை பகுதியில் இருந்து 4 குழந்தைகளை அமுதாவிடம் விற்றதாகவும், 8 குழந்தைகளை வாங்கி தந்திருப்பதாகவும் கூறினார். கடந்த 17ம் தேதியும் கொல்லிமலை வாழவந்திநாட்டில் ஒரு பெண் குழந்தையை வாங்கி விற்றதாக டிரைவர் முருகேசன் ஒப்புதல் அளித்துள்ளார்.
தீவிர விசாரணை
இந்த விவகாரத்தில், மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பணப்பரிமாற்றம்
இந்நிலையில் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் வங்கிக் கணக்கில் அதிக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஈரோடு மற்றும் கோவையில் இருந்து அதிக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அமுதாவின் வங்கி கணக்கு குறித்து ஆய்வு நடந்து வருகிறது.