கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவர் பலி.. தூக்கி வீசப்பட்ட மாணவிகள்.. பரபர சிசிடிவி காட்சி!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில், விபத்துக்குள்ளானபோது, பேருந்தில் இருந்த மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வலைதளத்தில் பரவி வருகிறது.
Recommended Video
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செம்மண்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் பிரபாகரன், ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக நாரைகிணறு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது முள்ளுக்குறிச்சியில் இருந்து ராசிபுரம் நோக்கி தனியார் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த லாரி ஒன்று, கல்லூரி பேருந்தின் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதனால், லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தை ஓட்டுநர் அன்பழகன் இடது புறமாக திரும்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த 5 ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் மீது நேராக பேருந்து மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், கல்லூரி பேருந்தில் பயணம் செய்த இரண்டு கல்லூரி மாணவிகள் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆயில்பட்டி போலீசார், காயமடைந்த கல்லூரி மாணவிகளை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குறுகிய சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தை ஓட்டுநர் இடதுபுறமாக திருப்பியதால் விபத்து நேரிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் மற்றும் கவனக்குறைவாக கல்லூரி பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications