நாமக்கல் அருகே பள்ளி வேன் டிரைவர் விஜய் அடித்து கொலை.. வண்டியை வேகமாக இயக்கியதால் அடித்ததாக புகார்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தனியார் பள்ளி வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேனை அதிவேகமாக இயக்கியதால், ஏன் இப்படி செல்கிறாய் என கூறி ஏளூர் பகுதியை சேர்ந்தவர்கள் வேன் டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த வேன் டிரைவரின் உறவினர்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் விசாககுளத்தை சேர்ந்த பள்ளி வாகனத்தை புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் இயக்கி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு கைக்குழந்தைகள் உள்ளது. ஏளூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மாணவ மாணவிகளை விஜய் பள்ளி வாகனத்தில் அழைத்து சென்று வருகிறார்.

அந்த வகையில் இன்று காலையிலும் பள்ளி வாகனத்தில் மாணவர்களை அழைத்து செல்வதற்காக வந்துள்ளார். ஏளூர் பகுதியை சேர்ந்த மாணவ - மாணவிகள் பள்ளி வேனில் ஏறிய நிலையில் வேன் அந்த ஊரை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அவர் வேனை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு ஏன் இப்படி வேகமாக இயக்குகிறாய்?..
கீழே இறங்கு.. பள்ளி மாணவர்களை வைத்துக்கொண்டு ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய்.. என்று கூறி வேன் டிரைவர் விஜய்யை கீழே இறக்கி சரமாரியாக அடித்துள்ளனர். ஒவ்வொருவராக சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தர். இதற்கிடையே விஜய் தாக்கப்படும் சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் சென்றது.
அதன்பேரில் விஜய்யின் மனைவி மற்றும் உறவினர்கள் விஜய் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் விஜய்யின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஏன்?.. எதற்காக இப்படி தாக்கினீர்கள்.. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாமே?.. ஏன் அடித்து கொன்றீர்கள் என கதறி அழுதனர். இதையடுத்து அப்பகுதியில் அமர்ந்து உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது நேற்றும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்ததாகவும், யார் என்ன என்று பார்க்காமல் இப்படித்தான் இந்த ஊர் மக்கள் அடித்து வருவதாகவும், இனி இது போன்ற சம்பவம் நடக்க கூடாது எனவும், வேன் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதேபோன்று என் கணவரை தாக்கியவர்களுக்கு இந்த ஊர் மக்கள் தங்கள் வீடுகளில் பதுங்கி இருக்க வைத்துள்ளனர் எனவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் விஜய்யின் மனைவி கோரிக்கை வைத்தார். தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications