முதுபெரும் அரசியல் தலைவர் டி.எம்.காளியண்ணன் காலமானார்-அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்தவர்!
நாமக்கல்: நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக பதவி வகித்தவருமான டி.எம். காளியண்ணன் (வயது 101) கொரோனா வைரஸ் தொற்றால் காலமானார்.
திருச்செங்கோடு அக்கரப்பட்டி கிராமத்தில் 1921-ம் ஆண்டு பிறந்தவர் காளியண்ணன். சென்னையில் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். பின்னர் 1948-ம் ஆண்டு 28 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இடம் பெற்றிருந்தார்.

எம்.பி.யாக காளியண்ணன்
1949-ல் அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வானவர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகினர். அதன்படி காளியண்ணனும் எம்.பியாக பதவியேற்றார்.

3 முறை எம்.எல்.ஏ.
1952 நாட்டின் முதலாவது தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். பின்னர் அடுத்த 2 தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வானார். 1967-ல் தேர்தலில் தோற்ற போதும், சட்ட மேல்சபை உறுப்பினராக, எதிர்க்கட்சி துணைத் தலைவராக பணியாற்றினார்.

தேர்தலில் வாக்களிப்பு
திருச்செங்கோடு காந்தி ஆசிரமம், அவ்வையார் பெயரிலான இலவச கல்விக்கான பள்ளி ஆகியவற்றை தொடங்கி நடத்தியவர் காளியண்ணன். அண்மையில் முடிவடைந்த சட்டசபை தேர்தலிலும் கூட முதுமையையும் பொருட்படுத்தாமல் வாக்களித்திருந்தார் காளியண்ணன்.

கொரோனா பாதிப்பு
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவுடன் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் காளியண்ணனுக்கு இருந்தது. இந்த நிலையில் நேற்று காளியண்ணன் காலமானார்.

அரசு மரியாதையுடன் தகனம்
நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான காளியண்ணன் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.எம். காளியண்ணன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications