''செந்தில்பாலாஜி சூரப்புலியா? காலம்காலமாக திமுகவில் உள்ளவர்களை ஸ்டாலின் ஒதுக்குவது ஏன்?'' -தங்கமணி
நாமக்கல்: திமுகவில் காலம் காலமாக இருந்துவரும் சீனியர் அமைச்சர்களை ஒதுக்கிவிட்டு செந்தில்பாலாஜிக்கு மட்டும் முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை நீக்கக் கோரி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். கட்சியில் சேர்ந்து 4 ஆண்டுகள் மட்டுமே ஆகும் ஒருவருக்கு ஸ்டாலின் இந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் எனத் தெரியவில்லை என்றார்.

செந்தில்பாலாஜி என்ன சூரப்புலியா என்றும் அவரால் தான் கோவை மாநகராட்சியில் திமுக வெற்றிபெற்றதாக கூறுவது ஏற்கும் படியாக இல்லை எனவும் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி தான் வெற்றிபெறும் என்பது காலம் காலமாக உள்ள வரலாறு என்றும் இதற்கு போய் செந்தில்பாலாஜி தான் வெற்றிக்கு காரணம் என எதுவும் தெரியாமல் முதல்வர் அறிக்கை விட்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
எல்லா மாநகராட்சிகளிலும் திமுக தான் வெற்றிபெற்றது அப்ப அவை அனைத்துக்கும் செந்தில்பாலாஜி தான் காரணம் என கூறுவீர்களா என வினவினார். நெஞ்சுவலி வந்த ஒருவரால் அதிகாரிகளை எப்படி எட்டி உதைக்க முடியும் என்று வினவிய முன்னாள் அமைச்சர் தங்கமணி செந்தில்பாலாஜியை போல் இந்தியாவில் இதுவரை வேறு எந்த அமைச்சரும் நாடகம் நடத்தியிருக்க முடியாது என விமர்சித்தார்.
அரசியல் கருத்துவேறுபாடுகள் இருப்பினும் செந்தில்பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என்பது தான் தங்களின் எண்ணம் என்றும் அதற்காக அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சையை நம்பாமல் தனியார் மருத்துவமனைக்கு செல்வதென்பது, அரசு மருத்துவமனையின் தரம் மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications