திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு! தவெக ஆட்சியில் நடவடிக்கை உறுதி.. விஜய்
நாமக்கல்: திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடந்த கிட்னி திருட்டு விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தவெக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். கிட்னி திருட்டு விவகாரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது நாமக்கல் மாவட்ட மக்கள் என்று கூறிய விஜய், விசைத்தறியில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்தே கிட்னி திருட்டு நடந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 3வது கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலை 8.45 மணிக்கு நாமக்கல் மாவட்டத்தில் விஜய் பேசுவார் என்று கூறப்பட்ட நிலையில், மதியம் 1.45 மணிக்கு நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் விஜய் பேசத் தொடங்கினார். விஜய்யின் பேச்சை கேட்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர்.

இதன்பின் தவெக தலைவர் விஜய் பேசுகையில், திமுக எம்எல்ஏ-வுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடந்த கிட்னி திருட்டு விவகாரம் நாடறிந்த ஒன்றாகும். இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் விசைத்தறியில் பணியாற்றும் ஏழை பெண்களை குறி வைத்தே இந்த கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
இதில் ஈடுபட்ட யாராக இருந்தாலும், தவெக ஆட்சி அமைந்த பின் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்த கிட்னி திருட்டின் ஆரம்பம் கந்து வட்டி கொடுமை தான். விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் ஏமாற்று மாடல் அரசு உயர்த்தாததால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதனால் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தேவையான தீர்வுகளை தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மக்கள் சாலை, கல்வி, மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு, ரேஷன், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை தான் கேட்கிறார்கள். அதனை சரியாக செய்வோம் என்று கூறிய போது, விஜய் புதிதாக எதையும் சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள்.
மனிதனுக்கு நல்ல சாப்பாடு, குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதி, பாதுகாப்பு ஆகியவையே அடிப்படை தேவை. இதனை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ அதனைதான் சொல்வோம். அதனையே செய்வோம். திமுகவை போல் பொய்யான வாக்குறுதிகளை சொல்ல மாட்டோம். புதிதாக என்ன சொல்ல வேண்டும்?
செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை போடப்படும் என்று அடிச்சிவிடுவோமா? நமது முதல்வர் அடிச்சிவிடுவதை போல் அடித்துவிடலாமா? பாஜகவுடன் ஒருநாளும் நாங்கள் ஒத்துப்போக மாட்டோம். அதேபோல் திமுகவை போல் மறைமுக உறவு வைத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications