இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்க முடிவு.. யுஎஸ், யுகே, பிரான்ஸ்.. மசூத் அசாருக்கு எதிராக ஐநாவில் மனு!
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக ஐநாவில் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக ஐநாவில் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய விமானி அபிநந்தன் இன்னும் பாகிஸ்தான் பிடியில்தான் இருக்கிறார்.
உலக நாடுகள் எல்லாம் இரண்டு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக மிக முக்கியமான நடவடிக்கை ஒன்று தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பேற்றுக்கொண்டார்
ஜெய்ஷ் இ முகமது இயக்கம் உலகில் உள்ள கொடூரமான இயக்கங்களில் ஒன்றாகும். புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு இந்த இயக்கம்தான் காரணம். 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இதன் தலைவன் மசூத் அசார் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கோரிக்கை
இதையடுத்து இந்த விஷயத்தை இந்தியா ஐநாவிற்கு கொண்டு செல்ல முடிவெடுத்தது. இந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று ஜநாவை நாட போவதாக தெரிவித்தது. இதற்கு உலக நாடுகளின் ஆதரவு வேண்டும் என்றும் கூறியது.

மூன்று நாடுகள் கோரிக்கை
இந்த நிலையில்தான் தற்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக ஐநாவில் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மனு அளித்துள்ளது.

என்ன கோரிக்கை
அதன்படி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க வேண்டும். மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும். இந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு புகலிடம் தருவது குற்றம். இவர்கள் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று இந்த மூன்று நாடுகளின் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications