தற்கொலை செய்த தமிழ் தம்பதி.. அமெரிக்காவில் தவிக்கும் குழந்தை.. சொத்தை சூறையாட பார்க்கும் "கும்பல்"
நியூயார்க்: அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தம்பதியினரின் குழந்தையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் கடந்த 1 வருடமாக இறந்தவர்களின் குடும்பம் ஈடுபட்டுள்ளனர். இதில் சமீபத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் அந்த குழந்தையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே E பெருமாள் பட்டியை சேர்ந்த குருசாமி, ஈஸ்வரி தம்பதியின் மகன் பிரவீன். இவரும், திருச்சி மனப்பாறையை அடுத்த கல்பட்டி பகுதியை சேர்ந்த தமிழ் செல்வியும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு மிலன் என்கிற அழகான குழந்தை உண்டு. இந்த நிலையில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது.

விசாரணை
இவர்களுடைய உடல்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், இவர்களுடைய 2 வயது மகனான மிலன் அமெரிக்காவில் உள்ள Missisippi department of child protection services -ன் பாதுகாப்பில் இருந்து வருகிறான். இதற்கிடையே பிரவீன்- தமிழ்செல்வி குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக GoFundMe எனும் அமைப்பு மூலம் பக்கம் தொடங்கி, பிரபாகரன் ராஜேந்திரன் எனும் நபர் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை நிதி திரட்டியுள்ளார் . இது இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடியை தொடும். மேலும் சிறுவன் மிலனை தத்தெடுக்க விரும்புபவர்கள் முன்வரலாம் என பிரபாகரன் ராஜேந்திரன் கொடுத்த அறிவிப்பையடுத்து அமெரிக்காவில் இருக்கும் ஒரு வடமாநில தம்பதியினர், கோர்ட்டை அணுகி சிறுவன் மிலனை தாற்காலிக இருப்பிடம் தர அனுமதி பெற்று, மேற்கொண்டு தத்து எடுக்கவும் மனு செய்து உள்ளனர்

மனு
நிலைமை இப்படி இருக்க, இதுபற்றி எதுவும் தெரியாமல் தமிழ்செல்வியின் தங்கை அபிநயா முருகன் சிறுவன் மிலனை சட்டப்படி இந்தியா அழைத்து வர அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி நகருக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற போதுதான் குழந்தையை வேறு ஒரு தம்பதியினர் தற்காலிகமாக தத்தெடுத்து சென்ற அதிர்ச்சி தகவல் அவருக்கு தெரிய வந்தது. இருப்பினும் மனம் தளராத அபிநயா முருகன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான வடமாநில தம்பதியினர், சிறுவன் மிலனை இந்தியாவுக்கு அனுப்பினால் அவனுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று வாதம் வைத்துள்ளனர்.

சிறுவன் தாத்தா
முக்கியமாக தமிழகத்தில் குறிப்பாக சிறுவனின் தாத்தா, பாட்டி இருக்கும் ஊரில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. தமிழகத்தில் குழந்தை கடத்தல் பரவலாக உள்ளது என்றும் இதனால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகும் என்ற வாதங்களை முன் வைத்தனர். இதனால் சிறுவனை மீட்டு இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் படி, தமிழகத்தில் ஒரு சிறப்பு குழு மிலனின் தாத்தா பாட்டியின் கிராமம் மற்றும் வீட்டிற்கு நேரடியாக சென்று அறிக்கை கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் MDCPS (Missisippi department of child protection services) அந்த அறிக்கையை அங்கீகாரம் செய்துள்ளது. ஆனாலும், அந்த வடமாநில தம்பதியினர் பிடிவாதமாக இருப்பதால், சிறுவனை இந்தியா கொண்டு வருவதில் கடந்த ஒரு வருடமாகவே சிக்கல் நீடிப்பதாக சிறுவனின் குடும்பத்தினர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

வருத்தம்
இந்த விவகாரம் அயலக குடியுரிமை பெறாத தமிழர்கள் நல வாரியத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு குழந்தையை மீட்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் கூட குழந்தையை தத்தெடுத்த வடமாநில தம்பதியினரின் பிடிவாதத்தால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்திய மற்றும் அமெரிக்க சட்டம் அறிந்த வல்லுநர்கள் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவரான கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் குழந்தை அமெரிக்க நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இரு குடும்பத்தின் அரவணைப்பிலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அமைப்புகள் கோரிக்கை
இதற்கிடையே குழந்தையை மீட்கும் இந்த போராட்டத்தில் அங்கு இருக்கும் உள்ளூர் தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் என பிரவீன் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இங்கிருந்து அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சில நடைமுறை சிக்கல்களை அமெரிக்காவில் இருக்கும் உள்ளுர் தமிழ் அமைப்புகளால் எளிதில் தீர்க்க முடியும் என்றும் எனவே குழந்தையை மீட்கும் இந்த போராட்டத்தில் அவர்கள் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமெரிக்காவில் செயல்படும் தென் மத்திய தமிழ் சங்கத்தின் தற்போதைய தலைவராக பிரவீன் தமிழ்செல்வி குடும்பத்திற்காக நிதி திரட்டிய பிரபாகரன் ராஜேந்திரன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த அமைப்பு சார்பில் குழந்தையை மீட்கும் இந்த போராட்டத்தில் பெரிய உதவிகள் எதுவும் செய்யவில்லை என்றும் தென் மத்திய தமிழ் சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் விரைந்து இதற்கு உதவ முன்வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications