கடல் நீரில் நனைந்த கடிகாரத்திற்கு இவ்வளவு மவுசா? ரூ.12 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் வாட்ச்!
நியூயார்க்: கடலில் மூழ்கிய கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் 'டைட்டானிக்' கப்பலிலிருந்து மீட்கப்பட்ட தங்க கை கடிகாரம் ஒன்று ரூ.12 கோடிக்கு விற்பனையாகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
ஆழ்கடலில் விபத்தில் மூழ்கிய கப்பல்களிலிருந்து, சில பொருட்கள் மீட்கப்படுவதுண்டு. இதனை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள். இப்படி கப்பல்களிலிருந்து மீட்கப்படும் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் லாபம் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் இருந்தும் அவ்வப்போது சில பொருட்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது விலை உயர்ந்த தங்க கை கடிகாரம் ஏலம் விடப்பட்டிருக்கிறது.

டைட்டானிக் கப்பல் மிகவும் பிரபலமானது என்பதாலும், சொகுசு கப்பல் என்பதாலும் அதில் பெரும்பாலும் பணக்காரர்கள்தான் பயணித்து வந்தனர். கடைசியாக இந்த கப்பல் மூழ்கும் போதும் ஏராளமான பணக்காரர்கள் இதில் பயணித்து வந்தனர். இவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மிகவும் விலை உயர்ந்ததாகும். இந்த பொருட்களுக்கு எப்போதுமே டிமாண்ட் அதிகம்.
இப்படி ஒரு மீட்பு பணியின்போது வில்லியம் ஹென்றி ஆலன் என்கிற பணக்கார பயணிக்கு சொந்தமான உடைமைகளில் இந்த தங்க கை கடிகாரம் கிடைத்திருக்கிறது. ஆலன் இந்த கப்பலில் பயணித்த உயிரிழந்தபோது அவருக்கு 47 வயது இருக்கும். அவருடன் சேர்த்து மொத்தமாக 1500 பயணிகள் உயிரிழந்தனர். அந்த காலத்தில் இவர் உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார்.
அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது மனைவி மேடலினை சிறிய படகு ஒன்றில் ஏற்றிருக்கிறார். விபத்தில் மேடலின் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துவிட்டார். கப்பல் விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஆலனின் உடலை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டிருக்கிறார்கள். இந்த மீட்பு பணியின்போதுதான் தங்க கை கடிகாரம் கிடைத்திருக்கிறது. சிலர் இந்த கடிகாரத்தை மூழ்கிய கப்பலில் இருந்து எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
பின்னர் இந்த கடிகாரம் ஏலத்திற்கு வந்தது. அதிகபட்சமாக ரூ.1 கோடியிலிருந்து 2 கோடி ரூபாய் வரைதான் விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ரூ.12 கோடிக்கு இந்த கடிகாரம் விற்கப்பட்டிருக்கிறது.
டைட்டானிக் பயணிகளின் கை கடிகாரங்கள் இப்படி ஏலம் விடப்படுவது இது முதல்முறை கிடையாது. ஏற்கெனவே, இந்த கப்பலில் பயணித்து உயிரிழந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த பயணி ஒருவரின் கை கடிகாரம் ரூ.98 லட்சத்திற்கு ஏலம் போயிருக்கிறது.
இருப்பினும் தண்ணீரில் நனைந்த வாட்ச்சை ரூ.12 கோடி கொடுத்து ஒருவர் வாங்குவது இதுவே முதல் முறை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 1912ல் டைட்டானிக் மூழ்கியிருந்தாலும் இன்று வரை இது குறித்த பேச்சுக்கள் அடிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications