ஜாதி பாகுபாடு கட்டினால் அவ்வளவுதான்.. வரிசையாக சட்டம் கொண்டு வரும் டாப் அமெரிக்க பல்கலைகள்.. அதிரடி!
நியூயார்க்: ஜாதி என்பதை இனவெறி, மதவெறி, நிறவெறி போன்ற பாகுபாட்டு கொள்கைகளில் ஒன்றாக கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதை தொடர்ந்து வரிசையாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவில் இதே அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்துக்கள் பூமியின் எந்த பகுதிக்கு சென்றாலும்.. அவர்கள் தங்களுடன் ஜாதியையும் கொண்டு செல்வார்கள்.. அதன்பின் இந்தியாவின் ஜாதி பிரச்சனை மொத்த உலகத்தின் பிரச்சனையாக மாறிவிடும்.. இதை சொன்னவர் டாக்டர் பிஆர் அம்பேத்கார். அதுதான் தற்போது அமெரிக்காவிலும் நடந்து உள்ளது. அங்கு இருக்கும் ஓசி பிரிவு இந்துக்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களை மோசமாக நடத்துவதாக, அவர்களுடன் ஜாதி பிரிவினை காட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த நாட்டின் பிரச்சனைகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது.
இந்த புகார்கள் இன்று, நேற்றல்ல பல காலமாக வைக்கப்பட்டு வரும் புகார்கள். ஆனால் இனவெறி, மதவெறி, நிறவெறி ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியும் அமெரிக்கர்களால் இந்த பிரிவினையை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை.. இப்போதும் கூட ஆங்கிலத்தில் "pariah" என்ற வார்த்தையை தாழ்வான ஒன்றை குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தையாகவே ஆங்கிலம் பேசும் பலரால் பயனப்டுத்தப்பட்டு வருகிறது.

கலிபோர்னியா
அங்கு இருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்.. பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர்.. முக்கியமாக கல்லூரிகளில் தாங்கள் சக இந்துக்கள் மூலம் ஜாதி ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்கிறோம் என்று கூறி வந்தாலும் அதை பெரிதாக அமெரிக்க சமூகம் இவ்வளவு நாட்கள் கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகம் ஜாதி என்பதை இனவெறி, மதவெறி, நிறவெறி போன்ற பாகுபாட்டு கொள்கைகளில் ஒன்றாக கடந்த ஜனவரி 1ம் தேதி அறிவித்தது. அதாவது ஜாதி ரீதியாக ஒருவரை பாகுபடுத்தினால் அது தண்டனைக்கு உரிய குற்றம்.

பாதிப்பு யாருக்கு?
அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாண பல்கலைக்கழகம் இது.. இந்த பல்கலை இப்படி ஒரு உத்தரவை போட்டு இருப்பது உலகம் முழுக்க பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்கர்களுக்கு இப்போதுதான் ஜாதிய பாகுபாட்டின் தீமைகள் தெரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு வெள்ளையின இளைஞர் கறுப்பின இளைஞரை "nigga" என்று அழைப்பது எப்படி தவறானதோ.. அதேபோல் இனி அமெரிக்காவில் உள்ள பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் சக இந்துக்கள் இழிவாக விழிப்பது, ஜாதி சொல்லி அழைப்பது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படும்.

வளர்கிறது
கலிபோர்னியா பல்கலையின் இந்த அறிவிப்பை தொடர்ந்து வரிசையாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் அமெரிக்காவில் இதே அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. கடந்த 2019லேயே ஜாதி என்பதை பாகுபாடுகளில் ஒன்றாக Brandeis University அறிவித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களில் மட்டும் Davis, Harvard University மற்றும் Colby College ஆகியவை ஜாதியை பாகுபாட்டு கொள்கைகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. கலிபோர்னியா பல்கலையை தொடர்ந்து வரிசையாக இந்த அறிவிப்பு அமெரிக்கா முழுக்க நீண்டு வருகின்றது .

பிரேம்
கலிபோர்னியா பல்கலையின் இந்த அறிவிப்பிற்கு பின் முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் நேபாளத்தை சேர்ந்த பிரேம் என்ற தலித் மாணவர். அந்த பல்கலையின் முன்னாள் மாணவர் இவர். இவர் முன்னெடுத்த போராட்டம்தான் இந்த அறிவிப்பிற்கு காரணம். நேபாளத்தில் இருந்து அமெரிக்கா சென்ற இவர் தலித் என்பதால் சக இந்துக்களால் கடுமையான பாகுபாட்டை எதிர்கொண்டு இருக்கிறார். அதை முடிவு கட்ட வேண்டும் என்று இவர் முன்னெடுத்த போராட்டம் இந்த அறிவிப்பு வெளியாக காரணமாக அமைந்துள்ளது.

2 வருட போராட்டம்
2 வருடமாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாணவர்கள் நடத்திய போராட்டம், கூட்டங்களை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 2 வருடமாக அங்கு பிற்படுத்தப்பட்ட இந்து மாணவர்கள் பல கோரிக்கைகளை வைத்து கூட்டங்களை நடத்தி வந்தனர். இப்போது அவர்களின் கோரிக்கைக்கு அப்பல்கலைக்கழகம் செவி சாய்த்து உள்ளது. 485,000 மாணவர்கள் படிக்கும், 56,000 ஆசிரியர்கள் வேலை பார்க்கும் ஒரு பலகைலையில் இருந்து இப்படி ஒரு பெரிய அறிவிப்பு வெளியாகி உள்ளது மற்ற மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications