துப்பாக்கி குண்டுகள் அல்ல.. வாக்கு பெட்டிதான் மாற்றத்தை தீர்மானிக்கும்! பைடன் சொன்னதை கவனிச்சீங்களா!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் அரசியல் மாற்றங்கள் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட கூடாது, வாக்கு பெட்டிகள் மூலம்தான் ஏற்பட வேண்டும் என அதிபர் பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இதனால் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இப்படி இருக்கையில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நேர நிலவரப்படி ஜூலை 13ம் தேதி மாலை 6.15 மணியளவில் பென்சில்வேனியாவில் உள்ள திறந்தவெளி திடலில் டிரம்ப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார்.
இதில், எதிர்பாரத விதமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மர்ம நபர் டிரம்பை குறி வைத்து சரமாரியாக சுட்டிருக்கிறார். ஆனால், குறி தவறி டிரம்ப்புக்கு பின்னால் இருந்தவர்களை குண்டு தாக்கியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். டிரம்ப்பின் காதை துப்பாக்கி குண்டு கிழித்து சென்றிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக பதில் தாக்குல் நடத்தினர். இதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதாவது, “அமெரிக்காவில் அரசியல் மாற்றங்கள் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட கூடாது. வாக்கு பெட்டிகளால் மட்டுமே ஏற்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “அரசியல் என்பது போர் களமாக மாறிவிடக்கூடாது. கருத்து வெறுபாடு தவிர்க்க முடியாததுதான். இருப்பினும் ஜனநாயகம் மனித இயல்பின் ஒருபகுதி என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
நம்முடைய கொள்கைகளால் நாம் எவ்வளவு பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அதை நிரூபிக்க நாம் வன்முறையில் ஈடுபடக்கூடாது. மாற்றம் குறித்து நாம் விவாதிப்போம், வன்முறை தீர்வல்ல. அரசியலில் எழுந்திருக்கும் இந்த தீவிர தன்மையை குறைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்காகத்தான் நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஒத்த கருத்தில் நாம் உடன்படாதபோது எதிரணியில் நிற்போம், எதிராளிகளாக அல்ல. நாம் அண்டை வீட்டுக்காரர்கள், நாம் நண்பர்கள், நாம் சக ஊழியர்கள் மிக முக்கியமாக நாம் அனைவரும் அமெரிக்கர்கள். நாம் ஓரணியில் நிற்க வேண்டும். பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், நாம் எங்கு நிற்கிறோம், எதை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பது குறித்து ஆராய தூண்டியிருக்கிறது. அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை. அப்படியான எதுவும் இங்கு அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் 20 வயதான தாமஸ் மேத்யூ என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ட்ரம்பின் பொதுக்கூட்டம் நடந்த இடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேற்கூரையில் பதுங்கியிருந்து இந்த தாக்குதலில் அவர் ஈடுபட்டிருக்கிறார். 400 மீட்டர் தொலைவில் ஸ்னைபர் தாக்குல் நடந்திருப்பது அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் வேலைகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications