2 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் ரத்த நிலவு! இந்தியாவில் தெரியுமா? ஆய்வாளர்கள் சொல்வது இதுதான்!
நியூயார்க்: கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் இந்த ஆண்டுதான் மீண்டும் ரத்த நிலவு தோன்றுகிறது. இதனை இந்தியாவிலிருந்து பார்க்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறினாலும், வேறு எங்கெல்லாம் தெரியும் என்பதை குறித்து விவரித்துள்ளனர்.
முழு சந்திர கிரகணத்தைதான் ரத்த நிலவு என்று கூறுவார்கள். அந்நாளில் நிலவு சிவப்பாக மாறும். எனவேதான் இதற்கு ரத்த நிலவு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை சந்திர கிரகணம் ராகு, கேதுவுடன் இணைத்து பேசப்படுகிறது. அதேநேரம் சந்திர கிரகணம் அன்று, உணவு எடுத்துக்கொள்ளாமலும் சிலர் இருக்கின்றனர். இதுவே கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் ரத்த நிலவு கடைசி நாள்களின் அறிகுறியாக பார்க்கிறார்கள். யேசுவின் மறுவரவு இந்த நாளில் நடக்கும் என்றும் நம்புகிறார்கள். தவிர, பேய், தீய சக்திகள் உருவம்தான் ரத்த நிலவு என்று சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களின் மத நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
இப்படி உலகம் முழுவதும் பல நம்பிக்கைகள் ரத்த நிலவை சுற்றி இருந்தாலும், உண்மையில் ரத்த நிலவு பார்ப்பதற்கு அற்புதமான ஒரு அறிவியல் அதிசயமாகும். சூரியனுக்கு நேராக பூமி, அதற்கு பின்னால் நிலவு வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நியாயமாக பார்த்தால், பூமியின் நிழல் நிலவின் மீது விழுந்து, நிலவு இருட்டாக மாற வேண்டும். ஆனால் சூரியனின் ஒளி, பூமியின் வளிமண்டத்தின் மீது விழுந்து எதிரொலிப்பதால், அது நிலவை சிவப்பாக மாற்றுகிறது.
இது மார்ச் 14ம் தேதி நடைபெறும். இந்தியாவில் இந்த கிரகணம் காலை 9:27 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3:03 மணிக்கு முடிவடைகிறது. எனவே ரத்த நிலவை இந்தியாவிலிருந்து பார்த்தால் தெரியாது. ஆனால், வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், மேற்கு ஐரோப்பா, மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பார்த்தால் இது தெளிவாக தெரியும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்தால், இரவு 11.57க்கு சந்திர கிரகணம் உங்களுக்கு தெரிய தொடங்கும். இரவு தொடங்கி அதிகாலை 3.31 மணி வரைக்கும் சந்திர கிரகணம் சிறப்பாக தெரியும். வெறும் கண்களில் இருந்து இதை பார்க்க முடியும். இருப்பினும் தொலைநோக்கியோ அல்லது பைனாகுலர் இருந்தால் இதை சந்திர கிரகணத்தை இன்னும் தெளிவாக பார்க்க முடியும். மொத்தம் 65 நிமிடம் வரை முழு சந்திர கிரகணம் நிகழும்.
அமெரிக்காவின் மைனே, மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், கனெக்டிகட், டெலாவேர், ஜார்ஜியா, வட கரோலினா, வெர்மான்ட், வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, ஓஹியோ, பென்சில்வேனியா, ரோட் தீவு, தென் கரோலினா, மிச்சிகன், டென்னசி, புளோரிடா, இந்தியானா மற்றும் கென்டக்கி ஆகிய இடங்களில் இதனை பார்க்கலாம்.
அலபாமா, ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், அயோவா, கன்சாஸ், லூசியானா, மினசோட்டா, மிசிசிப்பி, மிசௌரி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹோமா, தெற்கு டகோட்டா, டென்னசி, டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்களில், மார்ச் 13 அன்று இரவு 10:57 மணிக்கே கிரகணம் தொடங்கி, விடியற்காலை 2:31 மணிக்கு முடிந்துவிடும்.
வட அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளான அரிசோனா, கொலராடோ, இடாஹோ, மொன்டானா, நியூ மெக்ஸிகோ, உட்டா மற்றும் வயோமிங் ஆகிய இடங்களில் உள்ள மக்களுக்கு இரவு 9:57 மணிக்கு கிரகணம் தெரிய தொடங்கி, இரவு 1.31க்கு முடிந்துவிடும்.












Click it and Unblock the Notifications