கல்லூரி கல்லூரியாக பாசிசத்தை பரப்பிய சார்லி! GUN கலாச்சரத்தை புகழ்ந்தவருக்கு.. துப்பாக்கியாலே மரணம்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முக்கிய ஆதரவாளரும், கன்சர்வேட்டிவ் ஆர்வலருமான சார்லி கிர்க் (31), உட்டா மாகாணத்தில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இளம் ரிபப்ளிகன் வாக்காளர்களை அணிதிரட்டுவதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
கிர்க்-கின் "தி அமெரிக்கன் கம்பேக் டூர்" என்ற கல்லூரி சுற்றுப்பயணம், கொலராடோ முதல் விர்ஜினியா வரை இளம் வாக்காளர்களை டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக ஒன்று திரட்டும் நோக்கில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது தாக்குதல் நடைபெற்றது. கொலையாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சார்லி கிர்க்
இந்தக் கொலை தொடர்பாக எஃப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல், ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். "சந்தேகநபர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். எங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது, வெளிப்படைத்தன்மைக்காக தகவல்களை தொடர்ந்து வெளியிடுவோம்" என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், கிர்க் "தி அமெரிக்கன் கம்பேக்" மற்றும் "ப்ரூவ் மீ ராங்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மேடை மீது அமர்ந்து அவர் பேசிக்கொண்டு இருந்தார். துப்பாக்கி கலாச்சாரத்தை ஆதரித்து அவர் பேசிக்கொண்டு இருந்த போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
சார்லி கிர்க் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள்
பெண் விடுதலைக்கு எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்பு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஆதரவு, இளைஞர்களிடம் பாசிசத்தை பரப்புவது என்று சார்லி கிர்க் கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளானவர்.
துப்பாக்கி வன்முறையை ஆதரித்து இவர் பல முறை பேசி உள்ளது. துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்காக உயிரிழப்புகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். துப்பாக்கி வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று கூறி இருந்தார். துப்பாக்கி வன்முறையால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை அவர் அலட்சியப்படுத்தியதாகக் கூறி, இந்தக் கருத்து கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
பாசிச பேச்சுக்கள்
பலரும் அவரது பேச்சுகளை தீவிரமானவை, கடுமையானவை, பாசிச தன்மை கொண்டவை என்று கருதுகின்றனர். அவரது உரைகளும், பாட்காஸ்ட்களும் பல்வேறு சமூகத்தினரைத் தாக்கும், வன்முறையை கொண்டாடும், மற்றும் சிவில் உரிமைகளை நிராகரிக்கும் கருத்துகளால் நிறைந்துள்ளன. துப்பாக்கி உரிமைகள் குறித்து கிர்க் ஒருமுறை பேசுகையில், துப்பாக்கி இறப்புகள் "துரதிர்ஷ்டவசமானவை ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலை" என்று குறிப்பிட்டார். இரண்டாம் திருத்தச் சட்டத்தை (Second Amendment) வலுவாக வைத்திருக்க இது அவசியம் என்றார். இந்தக் கருத்து மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாதது போல் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.
குடிவரவு குறித்து பேசிய கிர்க், புலம்பெயர்ந்தோரை சவுக்கால் அடிக்கலாம் என்றும், அவர்களை அச்சுறுத்தும்பொருட்டு அவர்களுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்றும் தெரிவித்தார். மாற்றுப்பாலின நீச்சல் வீராங்கனை லியா தாமஸ் பற்றி குறிப்பிடுகையில், ஆண்கள் தேவைப்பட்டால் பலவந்தமாக சென்று அவரை நீச்சல் அடிக்க விடாமல் தடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாஷ்வில்லில் நடந்த பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவர் "டிரான்ஸ் ஜிஹாதிகள்" என்ற சொல்லைப் பயன்படுத்தி திருநங்கைகளை விமர்சனம் செய்தார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை "மோசமானவர்" என்று நிராகரித்த அவர், சிவில் உரிமைகள் சட்டம் "ஒரு பெரிய தவறு" என்றார். கறுப்பின மக்கள் வெள்ளையர்களைக் குறிவைத்து "சுற்றித் திரிகிறார்கள்" என்று கூறிய அவர், கறுப்பின வரலாற்று மாதத்தை (Black History Month) கேலி செய்தார். அதோடு கறுப்பின மக்கள் தொடர்ந்து அடிமைகளாக இருப்பதே சரி.. அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டது தவறு என்றும் பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார்.












Click it and Unblock the Notifications