கொரோனா ரத்தம் முதல் இஸ்ரேல் தடுப்பூசி வரை.. பரபரக்கும் விற்பனை.. அதிர வைக்கும் டார்க் வெப் மோசடிகள்!
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதே கொரோனாவை மையமாக வைத்து டார்க் வெப் தளங்களில் நிறைய மோசடிகள் நடந்து வருகிறது.
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதே கொரோனாவை மையமாக வைத்து டார்க் வெப் தளங்களில் நிறைய மோசடிகள் நடந்து வருகிறது.
Recommended Video
டார்க் வெப் தளங்களில் நடக்கும் மோசடி குறித்து தெரிந்து கொள்ளும் முன் டார்க் வெப் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். டார்க் வெப் என்பது என்கிரிப்ட் செய்யப்பட இணைய பக்கங்கள் ஆகும். இந்த பக்கங்களை சாதாரணமாக உங்கள் பிரவுசரில் தேடினால் கிடைக்காது. இது இணையத்தில் இருக்கும் தனிப்பட்ட கருப்பு உலகம் என்று கூட கூறலாம்.
உங்கள் பிரவுசரில் உள்ள சர்ச் எஞ்சின் மூலம் நீங்கள் டார்க் வெப் தளங்களை பயன்படுத்த முடியாது. அதற்கு என்று தனியான சர்ச் எஞ்சின்கள் உள்ளது, தனியான பிரவுசர்கள் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது போன்ற தளங்களை பயன்படுத்த தனி விபிஎன் லாகின் கணக்குகள் உள்ளது.

அதிக பணம்
இதற்கு என்று பணம் கொடுத்து லாகின் ஐடி மற்றும் விபிஎன் கணக்குகளை பெற்றுதான் டார்க் வெப் பக்கங்களை பயன்படுத்த முடியும். இந்த டார்க் வெப் பக்கங்கள் அதிக அளவில் ஹேக்கர்கள், மோசடி மன்னர்கள், இணைய ஹவாலா குழுக்கள் இயங்க கூடிய பக்கம் ஆகும். அதனால் இங்கு இணையம் குறித்து முழுக்க தெரியாமல் உள்ளே சென்றால், பெரிய அளவில் சிக்கலை சந்திக்க நேரிடும்.

விற்பனை செய்வார்கள்
இந்த பக்கங்களில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதாவது உங்கள் நாடுகளில் தடை செய்யப்பட பொருட்கள், அதிக விலையில் இருக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வது என்று இந்த டார்க் வெப் உலகில் தனி மார்க்கெட் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவை மையமாக வைத்து டார்க் வெப் தளங்களில் நிறைய மோசடிகள் நடந்து வருகிறது. கொரோனா காரணமாக டார்க் வெப் சந்தை விரிவடைந்து இருக்கிறது.

விற்பனை செய்கிறார்கள்
தற்போது டார்க் வெப் சந்தைகளில் கொரோனா மருந்துகளை விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது கொரோனாவை குணமாக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் என்று நிறைய போலியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தளங்களுக்கு சென்று லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்தால் போதும் கொரோனா தடுப்பூசி உங்கள் வீட்டிற்கே வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அதிலும் 10 தடுப்பூசிகள் வெறும் 99 டாலருக்கு கிடைக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இஸ்ரேல் தடுப்பூசி
இந்த தடுப்பூசிகள் எல்லாமே இஸ்ரேலை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் இருந்துதான் இப்படி பலர் பொய்யான தடுப்பூசிகளை விற்பனை செய்து வருகிறார்கள். நிறைய தனி தனி குழுக்கள் இப்படி பொய்யான தடுப்பூசிகளை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த மருந்தை போட்டுவிட்டு வெளியே செல்லுங்கள் உங்களுக்கு உங்கள் வாழ்க்கை முழுக்க கொரோனா வராது என்று மோசடி விளம்பரங்களை செய்து வருகிறார்கள்.

கொரோனா ரத்தம்
அதேபோல் இன்னொரு பக்கம் பலர் கொரோனா பாதித்த நபர்களின் ரத்தங்களை விற்பனை செய்கிறார்கள். எங்களிடம் கொரோனா பாதித்த நபர்களின் ரத்தம் இருக்கிறது. உங்களுக்கு நாங்கள் கொடுக்க தயார். நீங்கள் அதை வைத்து ஆராய்ச்சி செய்யலாம் என்று சிலர் விற்பனை செய்கிறார்கள். தாங்கள் மருத்துவமனையில் வேலை பார்ப்பதாக கூறி இவர்கள் இந்த விற்பனையை செய்கிறார்கள். முக்கியமாக ஐரோப்பாவை சேர்ந்த பலர் இப்படி கொரோனா பாதித்தவர்களின் ரத்தங்களை விற்பனை செய்கிறார்கள்.

வௌவால்
இன்னும் சிலர் வௌவால் ரத்தத்தை சோதனை செய்வதற்காக விற்பனை செய்கிறார்கள். அதாவது எங்களிடம் அனைத்து வகையான வௌவால் ரத்தமும் சிறுநீரும் உள்ளது. வுஹனில் பிடிக்கப்பட்ட வௌவால் ரத்தம் எங்களிடம் இருக்கிறது. மனித ரத்தம் கலந்த வௌவால் ரத்தமும் எங்களிடம் உள்ளது. நீங்கள் சோதனை செய்ய தருகிறோம் என்று நிறைய மோசடிகளை செய்து வருகிறார்கள். வெறும் 36 டாலருக்கு இந்த ரத்தத்தை விற்பனை செய்கிறார்கள்.

நண்பர்கள் மீது பயன்படுத்துங்கள்
அதில் ஒரு முக்கியமான விளம்பரத்தில் எங்களிடம் கொரோனா நோயாளிகளின் ரத்தம் உள்ளது. உங்களுக்கு தருகிறோம். உங்களுக்கு பிடிக்காத நபர்கள் மீது அதை நீங்கள் ஸ்பிரே செய்யலாம். இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடிக்காத நபர்கள் மீது கொரோனாவை பரப்ப முடியும். உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு கொரோனாவை ஏற்படுத்த உங்களுக்கு ரத்தத்தை கொடுக்கிறோம் என்றெல்லாம் கூட விளம்பரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

மோசமான மருந்துகள் விற்பனை
அதேபோல் போலியான மருந்து விற்பனையும் இதில் நடக்கிறது. மாஸ்க், வெண்டிலேட்டர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள், பாதுகாப்பு உடைகள் என்று நிறைய விதமான மருந்துகளை இதில் விற்பனை செய்கிறார்கள். வெளியில் கிடைக்கும் பொருள்களின் விலையை விட இதில் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கிறது. ஒரு காலத்தில் டார்க் வெப் தளங்களில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிகுண்டு தொடர்பான பொருட்கள்தான் விற்கப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது அப்படி இல்லை
ஆனால் இப்போது அதே உலகை கொரோனா மருந்துகள் ஆக்கிரமித்து உள்ளது . ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்கு பதில் பிட் காயின் மூலம் இதில் பண பரிமாற்றம் நடக்கிறது. இப்படித்தான் டார்க் வெப் தளங்களில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். இதில் 99% பொருட்கள் மோசடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா உலகை ஆட்டிப்படைக்கும் வேலையில், இது போன்ற மோசடி தளங்களும் இன்னொரு பக்கம் வளர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications