“நீ பெண்ணே இல்ல.. ஆம்பள மாதிரி இருக்க!”.. தமிழா தமிழா மேடையில் வெடித்த சர்ச்சை.. அதிர்ந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சி பல ஆண்டுகளாக குடும்பம், உறவு, பெண்கள், சமூகக் கருத்துகள், தலைமுறை மோதல்கள் என பல்வேறு தலைப்புகளை மையமாக வைத்து விவாதங்களை நடத்தி வருகிறது. சில வாரங்களில் இந்த மேடை வெறும் விவாத நிகழ்ச்சியாக இல்லாமல், நேரடியாக சமூகத்தின் முகத்தை கண்ணாடிபோல் காட்டும் இடமாக மாறிவிடுகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடு, டிவி ரசிகர்கள் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

Tamizha Tamizha Zee Tamil

தமிழா தமிழா நிகழ்ச்சி

இந்த வாரம் நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு - "நீண்ட தலைமுடி வைத்திருக்கும் பெண்களா? ஷார்ட்டாக முடி வைத்திருக்கும் பெண்களா?" என்பது. வெளியில் பார்த்தால் இது ஒரு சாதாரண அழகு, ஸ்டைல், விருப்பம் பற்றிய விவாதமாக தோன்றலாம். ஆனால் மேடையில் நடந்த பேச்சுக்கள் சில நிமிடங்களில் இதை மிகவும் சென்சிட்டிவான ஒரு சமூகப் பிரச்சனையாக மாற்றிவிட்டன.

இந்த வாரம் எபிசோடு

நீண்ட தலைமுடியுடன் புடவை கட்டி வந்த அணியில் இருந்த சிலர், ஷார்ட் ஹேர் பெண்களை நோக்கி பேசிய சில வார்த்தைகள்தான் இந்த எபிசோடின் பூகம்பமாக மாறிவிட்டது.

எதிர் தரப்பில் இருந்த சில பெண்கள், "பெண் என்றால் ஒரு மென்மை, ஒரு தோற்றம், ஒரு அடையாளம் இருக்கும். முடியை இவ்வளவு குட்டையாக வெட்டிக்கொண்டால் பெண்மையே தெரியவில்லை. பார்த்தவுடன் ஆண்களைப் போலத்தான் தோன்றுகிறது" என்ற கருத்தை சொல்லிவிட்டனர். சாதாரணமாக கருத்து வேறுபாடாகத் தொடங்கிய இந்தப் பேச்சு, அடுத்த நொடியே மேடையில் இருந்த ஷார்ட் ஹேர் பெண்களின் கோபத்தையும் வேதனையையும் வெடிக்க வைத்தது.

எதிர்தரப்பு விவாதம்

அதில் குறிப்பாக ஷார்ட் ஹேர் அணியில் இருந்த ஒரு பெண், எதிர் தரப்பின் வார்த்தைகளை கேட்டதும் கண்கலங்கியபடியே பதிலடி கொடுத்தார். அந்தப் பெண் மிகவும் கோபத்துடனும் வேதனையுடனும் பேசியது மேடையையே சில நிமிடங்கள் அமைதியாக்கிவிட்டது.

"நாங்கள் இவர்கள் பேசுவதற்கு முன்பு வரை அவர்கள்மேல் மரியாதை வைத்திருந்தோம். எல்லாருக்கும் தனி கருத்து இருக்கலாம், அதை மரியாதையாக சொல்லலாம். ஆனால் அதே மேடையில், குறிப்பாக பச்சை கலர் புடவை கட்டியிருந்த அந்த அம்மா, எங்களுடைய தோற்றத்தைப் பற்றி பேசுவதைக் கடந்து, எங்களுடைய பாலினமே கேள்விக்குறியாக இருக்கும் மாதிரி பேசிய பிறகு அவர்மேல் இருந்த மரியாதையே போய்விட்டது" என்று அவர் கூறினார்.

அதோடு நின்றுவிடாமல், தன் வாழ்க்கையில் நடந்த பல அவமானங்களையும் அங்கே பகிர்ந்தார். அந்தக் கணமே இந்த விவாதம் "முடி ஸ்டைல்" பற்றிய பேச்சிலிருந்து "ஒரு பெண்ணின் உடல், குரல், தோற்றம், அடையாளம் எல்லாவற்றையும் சமூகமெப்படி தீர்மானிக்கிறது?" என்ற பெரிய கேள்விக்குள் சென்று விட்டது.

வெளித்தோற்றத்தால் அவமானம்

அந்தப் பெண் சொன்ன அனுபவங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருந்தன. "எனக்கு கம்ஃபர்டபிளாக இருந்ததால்தான் நான் என்னுடைய தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டேன். அது என்னுடைய விருப்பம். ஆனா அதற்காக என்னுடைய சொந்த வீட்டிலேயே சில உறவினர்கள் என்னிடம், 'இப்போ முடியை வெட்டிட்ட... அடுத்து மார்பையும் வெட்டிக்கிட்டு ஆம்பளையாக மாறிடுவியா?' என்று கேள்வி கேட்டிருக்காங்க" என்று அவர் கூறியபோது, மேடையில் இருந்தவர்களும் சில நொடிகள் அதிர்ச்சியாக அவரை பார்த்தனர்.

Tamizha Tamizha Zee Tamil

குடும்பத்தினரின் கேள்வி

ஒரு பெண் தன் முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கூட இன்னும் சமூக அனுமதி கேட்க வேண்டிய விஷயமா என்ற கேள்வியை இந்த ஒரு வரியே எழுப்பியது.

அசிங்கப்பட்ட தருணம்

அதற்குப் பிறகு அவர் பகிர்ந்த சம்பவம் தான் சமூக வலைதளங்களில் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. "ஒருமுறை தியேட்டருக்கு போனபோது ரெஸ்ட் ரூம் பயன்படுத்த நான் பெண்கள் பக்கத்துக்குள் சென்றேன். அங்கிருந்த சில பெண்கள் என்னை பார்த்ததும் 'தம்பி, இங்க வரக்கூடாது' என்று சொன்னிருந்தால் கூட பரவாயில்லை. ஏன்னா நான் ஆண் மாதிரி தோன்றியிருக்கலாம். ஆனால் அவர்கள் என்னை தரதரவென இழுத்து வெளியே கொண்டு வந்தார்கள். நான் பெண் தான் என்று சொல்லியும் கேட்கவே இல்லை" என்று அவர் பகிர்ந்தார்.

இந்த ஒரு சம்பவமே நிகழ்ச்சியைப் பார்த்த பலரையும் உலுக்கியிருக்கிறது. ஒரு பெண்ணின் உடை, முடி, குரல், உடலமைப்பு எல்லாம் சமூகத்தின் வழக்கமான "பெண்மை" அளவுகோலில் பொருந்தவில்லை என்றால், அவளை பெண்ணாகவே ஏற்க மறுக்கும் மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை இந்த அனுபவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

பஸ்ஸில் நடந்த அவமானம்

அந்தப் பெண் அதோடு நின்றுவிடவில்லை. பொதுப் போக்குவரத்திலும் தான் சந்தித்த அவமானங்களை கூறினார். "ஒருமுறை நான் பஸ்ஸில் பயணம் பண்ணும்போது, என் பக்கத்தில் ஒரு பெண்ணுக்கு சீட் புக் செய்யப்பட்டிருந்தது. அவங்க வந்து என்னைப் பார்த்ததும், டிரைவர், கண்டக்டர் எல்லாரையும் கூப்பிட்டு, 'எப்படி ஒரு ஆம்பள பையன் கூட எனக்கு சீட் போட்டிருக்கீங்க?' என்று சண்டை போட்டாங்க. நான் பெண் தான் என்று சொன்னேன். ஆனா அவங்க நம்பவே இல்லை" என்று அவர் சொன்னார்.

அவர் கூறிய இன்னொரு வரி இன்னும் அதிர்ச்சியாக இருந்தது, "எதிர் தரப்பில் இருப்பவர்கள் என்னை முடியை வைத்து ஆம்பள மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. ஆனா அந்தப் பெண் என்னைப் பார்த்து, 'இவங்க குரல் கூட ஆம்பள மாதிரி இருக்கு... உங்க கூட எல்லாம் என்னால வர முடியாது'ன்னு கூட சொன்னாங்க."

இந்த வார்த்தை நிகழ்ச்சியை பார்த்த பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் குரல் கூட பெண்மையின் அளவுகோலாக மாறி, அதையே வைத்து அவளை அவமதிக்கும் அளவுக்கு சமூகத்தில் விஷயம் போய்விட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

முடி பற்றி தொடங்கிய விவாதம்

தமிழா தமிழா மேடையில் நடந்த இந்த விவாதம், "நீண்ட முடி தான் பெண்மை", "புடவை கட்டினால் தான் பெண்", "குட்டை முடி வைத்தால் ஆண் போல" என்ற பழைய கட்டமைப்புகள் இன்னும் எவ்வளவு வலுவாக உயிருடன் இருக்கின்றன என்பதை வெளிப்படையாக காட்டியது.

ஒரு பக்கம், "பெண் என்றால் அழகாக நீண்ட முடி வைத்திருக்க வேண்டும், அது தான் பெண்மையின் அடையாளம்" என்று வாதிட்டவர்கள் இருந்தனர். மறுபக்கம், "பெண் என்றால் அவசியம் ஒரு மாதிரி தான் இருக்க வேண்டும் என்ற சட்டம் எங்கே இருக்கிறது? முடி வெட்டினாலோ, பேன்ட் போட்டாலோ, குரல் கம்பீரமாக இருந்தாலோ பெண்மையே போய்விடாது" என்று ஷார்ட் ஹேர் அணியினர் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த மோதல்தான் இப்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+