கொரோனா.. இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை மணி.. அச்சுறுத்தும் அமெரிக்க புள்ளிவிவரம்.. பகீர் தகவல்!
கொரோனா காரணமாக முதியவர்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க தற்போது இளைஞர்களும் அதிக அளவில் பலியாகி வருகிறார்கள்.
நியூயார்க்: கொரோனா காரணமாக முதியவர்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க தற்போது இளைஞர்களும் அதிக அளவில் பலியாகி வருகிறார்கள். முக்கியமாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் இளைஞர்கள்தான் அதிக அளவில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனா சீனாவில் தாக்க தொடங்கிய சமயத்தில் முதலில் அந்த வைரஸ் முதியவர்களை மட்டும்தான் பாதிக்கிறது. முதியவர்களை மட்டும்தான் இந்த வைரஸ் கொல்கிறது என்று கூறப்பட்டது. தொடக்கத்தில் உண்மையில் அப்படித்தான் நடந்தது.
இதனால்தான் இந்த வைரசுக்கு 'பூமர் ரிமூவர்' என்று பெயர் வைக்கப்பட்டது. இணையத்தில் வயதானவர்களை பூமர் என்று அழைக்கும் வழக்கம் இருப்பதால், பூமர்களை நீக்கும் வைரஸ் இது என்று கிண்டலாக கூட அழைக்கப்பட்டது.

உண்மையில் என்ன நடக்கிறது
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக முதியவர்கள் மடடும் பலியாகவில்லை. இந்த வைரஸ் காரணமாக இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சீனாவில் மட்டும்தான் இந்த வைரஸ் காரணமாக 65% முதியவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஜப்பானிலும் முதியவர்கள்தான் அதிகம் (59% சதவிகிதம்) பாதிக்கப்பட்டனர். ஆனால் சீனாவிற்கு வெளியே முதியவர்களை விட இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உண்மையான புள்ளி விவரம்
அமெரிக்காவிலும் மற்ற சில நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்ட்டுள்ளனர். உதாரணமாக நியூயார்க்கில் மொத்தம் 1160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 60% பேர் 18-49 வயதுக்கு உள்ளே இருக்கிறார்கள். மொத்தமாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 38% பேர் 20 முதல் 54 வயது கொண்டவர்கள்.

உலகம் முழுக்க
அதிகமாக கலிபோர்னியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1000 இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வயது 18-45 க்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது, மற்ற நாடுகளிலும் இதேதான் நிலை. ஸ்பெயினில் மொத்தம் 45% பேர் 50 வயதிற்கும் குறைவான வயது கொண்டவர்கள். தென் கொரியாவில் மொத்தமாக 62% பேர் 50 வயதுக்கும் குறைவான வயது கொண்டவர்கள்.

ஒரே வித்தியாசம்
ஆனால் ஒரே வித்தியாசம் இந்த கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சீக்கிரம் குணம் அடைகிறார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அவர்கள் குணம் அடைகிறார்கள். ஆனால் முதியவர்கள்தான் இந்த கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக பலியாகிறார்கள். முக்கியமாக அதிக வயது கொண்ட ஆண்கள் இதனால் பலியாகிறார்கள்.

மொத்த எண்ணிக்கை என்ன சொல்கிறது
உலகம் முழுக்க 80+ வயதுக்கு மேல் இருந்தால் 14.8% பேர் பலியாகிறார்கள். 70-79 வயதுக்குள் இருந்தால் 8.0% பேர் பலியாகிறார்கள். 60-69 வயதுக்குள் இருந்தால் 3.6% பேர் பலியாகிறார்கள். 50-59 வயதுக்குள் இருந்தால் 1.3% பேர் பலியாகிறார்கள். 40-49 வயதுக்குள் இருந்தால் 0.4% பேர் பலியாகிறார்கள். 30-39 வயதுக்குள் இருந்தால் 0.2% பேர் பலியாகிறார்கள். 20-29 வயதுக்குள் இருந்தால் 0.2% பேர் பலியாகிறார்கள் 10-19 வயதுக்குள் இருந்தால் 0.2% பேர் பலியாகிறார்கள்.0-9 வயதுக்குள் யாருமே பலியாகவில்லை.

சிக்கலாகும்
தமிழகத்திலும், இந்தியாவிலும் இளைஞர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்களை நம்பித்தான் இந்தியாவின் முன்னேற்றம், எதிர்காலம் எல்லாம் இருக்கிறது. தமிழகத்தின் வருவாயின் முதுகெலும்பாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். அதனால் இந்தியாவில் கொரோனா வேகம் எடுத்தால் மிகப்பெரிய பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும். அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளின் இந்த புள்ளி விவரம் நம்மை அச்சுறுத்தும் வகையில் எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது.

என்ன காரணம்
இளைஞர்கள் வெளியே சென்று வைரஸ் வாங்கி வருவது இன்னொரு பிரச்சனையை உண்டாக்கும். இளைஞர்களுக்கு வைரஸ் வந்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் மூலம் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு வைரஸ் பரவினால் அவர்களை காப்பது கடினம். அதனால் முதியவர்களை காக்க வேண்டும் என்றால், இந்த நாட்டை காக்க வேண்டும் என்றால் நாம் இளைஞர்களை காக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications