உண்மைக்காதல் கொரோனாவையும் ஜெயிக்கும்.. நிரூபித்துக் காட்டிய காதலர்கள்.. ஒரு நெகிழ்ச்சித் தருணம்!
அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு மருத்துவமனையில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா நோயாளி ஒருவர், மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுவது அமெரிக்காவில் தான். இதனால் அந்நாட்டு மக்கள் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளை தள்ளிவைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் வைத்தே தனது காதலியை கரம்பிடித்த ருசிகர சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
சான் ஆண்டனியோ பகுதியை சேர்ந்தவர் கார்லோஸ் முனிஸ். இவர் கிரேஸ் எனும் பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நிலையில், கார்லோஸ்க்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டது.

மருத்துவர்கள் சம்மதம்
இதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனால் காதலி கிரேஸ் மிகவும் கவலை அடைந்தார். கர்லோஸை நிச்சயம் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்த அவர், மருத்துவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்தார்.

சமூக இடைவெளி
இதையடுத்து மருத்துவமனையில் வைத்தே கிரேஸ் - கர்லோஸ் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது மணப்பெண், மணமகன் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், தகுந்த சமூக இடைவெளியும் பின்பற்றப்பட்டது. உணர்ச்சி பெருங்கடல் சூழல இத்திருமணம் நடைபெற்றது.

காதல் கைவிடவில்லை
கர்லோஸ் மீது கிரேஸ் வைத்திருந்த காதல் வீண்போகவில்லை. திருமணம் நடந்த முடிந்த மறுதினமே கர்லோஸின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அடுத்த ஓரிரு வாரங்களில் கொரோனாவின் பிடியில் இருந்து அவர் முழுமையாக விடுபட்டுவிட்டார்.

காதலைக் கொண்டாடுவோம்
கர்லோஸ் குணமடைய அவரது காதல் தான் காரணம் என மருத்தவர்கள் முழுமையாக நம்புகின்றனர். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கர்லோஸ் விரைவில் வீடு திரும்பி, கிரேஸ் உடன் புதிய வாழ்வை தொடங்க இருக்கிறார். கொரோனாவை வென்ற இந்த காதலை நாமும் கொண்டாடுவோம்.












Click it and Unblock the Notifications