“என்னால முடியல.. 8 வருசமா இந்தக் கொடுமை”- அழுது தீர்த்து வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!
நியூயார்க் : ஆண் குழந்தை பெற்றுத் தராததற்காக தினசரி அடித்துக் கொடுமைப் படுத்தியதால், இனியும் அடிவாங்க வாங்க முடியாது என வேதனையுடன் கூறி அமெரிக்காவில், இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற பெண், அமெரிக்காவில் குடும்ப வன்முறை காரணமாக தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் அவரது கணவரால் தாக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அப்பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ, பார்ப்பவர்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் மன்தீப் கவுருக்கு நீதி வேண்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

உ.பி பெண்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற பெண்ணுக்கு ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர், கணவர் ரஞ்சோத்வீர் சிங்குடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றார் மன்தீப். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை பெற்றுத் தராததற்காக கடந்த 8 வருடங்களாக கணவர் ரஞ்ஜோத்வீரால் கடுமையான வன்முறைக்கு ஆளாகி உள்ளார் மன்தீப்.

அடித்துக் கொடுமை செய்த கணவன்
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி மன்தீப் கவுர் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மன்தீப் கவுர். கடந்த எட்டு ஆண்டுகளாக தனது கணவர் அடித்து, துன்புறுத்தி வந்ததை வேதனையுடன் கண்ணீரோடு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

உருக்கமான வீடியோ
அந்த வீடியோவில் "நான் பல வருடங்களாக பொறுத்துக் கொண்டேன். எனது குழந்தைகளுக்காக பொறுத்துக் கொண்டேன். அவர் தனது நடவடிக்கையை ஒரு நாள் மாற்றிக் கொள்வார் என்று நம்பினேன். ஆனால் 8 வருடங்கள் கடந்துவிட்டன. என்னால் இனியும் தினசரி அடிவாங்க முடியாது. அவர்கள் என்னை தற்கொலைக்கு வற்புறுத்துகிறார்கள். நான் இந்த முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார் மன்தீப்.

கெஞ்சிய குழந்தைகள்
மேலும் சில சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. அவற்றில் மன்தீப் கவுர் அவரது கணவரால் கடுமையாகத் தாக்கப்படும் காட்சிகள் பதிவாகி உள்ளன. ரஞ்சோத்வீர் சிங் சந்து, மன்தீப் கவுரை தாக்கும் போது, அடிக்க வேண்டாம் என அவரது இரண்டு குழந்தைகளும் அழுது கெஞ்சும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

குற்றச்சாட்டு
மன்தீப் கவுர், ஆண் குழந்தை பெற்றுத் தரக் கோரி, அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தாரால் கொடூரமாக கொடுமைப் படுத்தப்பட்டு உள்ளார் என்றும், ரூ.50 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறியும் அவரது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர் என்றும் மன்தீப்பின் சகோதரி குல்தீப் கவுர் குற்றம்சாட்டியுள்ளார்.

போலீசில் புகார்
மன்தீப் கவுரின் தந்தை ஜஸ்பால் சிங், பிஜ்னோர் நகரில் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், ரஞ்சோத்வீர் சிங் சந்துவின் தந்தை முக்தார் சிங், தாய் குல்தீப் ராஜ் கவுர் மற்றும் சகோதரர் ஜஸ்வீர் சிங்கின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications