சீன மக்களுடன் உடலுறவு - காதலுக்கு தடை! அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு டிரம்ப் உத்தரவு.. ஏன் தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் சீனாவை சேர்ந்தவர்களுடன் உடலுறவு வைத்து கொள்ளக்கூடாது. அவர்களை காதலிக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும், சீனாவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. தற்போது அமெரிக்கா தான் பல துறைகளில் முன்னணியில் உள்ளது. அதோடு சீனாவை ஒப்பிடும்போது அமெரிக்காவின் செல்வாக்கு தான் உலக நாடுகள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதனை முறியடிக்கும் முனைப்பில் சீனா செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் செல்வாக்கை குறைத்து உலகில் முன்னணி நாடாகவும், பெரும் பொருளாதாரம் கொண்ட நாடாகவும் மாற வேண்டும் என்ற முனைப்பில் சீனா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா - சீனா இடையே நேரடியாகவும், மறைமுகமாகவும் பல விஷயங்களில் மோதல் என்பது உள்ளது. இதனால் சீனாவும், அமெரிக்காவும் எலியும், பூனையுமாக உள்ளது. இருநாடுகளும் எதிரி நாடாக உள்ளது.
இதற்கு அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் விதிவிலக்கல்ல. இவரும் சீனாவை ரசிப்பது இல்லை. சீனாவை முடக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் தான் இந்த டொனால்ட் டிரம்ப். இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் சீனாவுக்கு தற்போது டொனால்ட் டிரம்ப் அதிகப்படியான வரிகளை விதித்துள்ளார். அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் ஏற்கனவே 20 சதவீதம் வரி விதித்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சீனாவுக்கு 34 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதன்மூலம் சீனா மீதான டொனால்ட் டிரம்பின் நிலைப்பாட்டை தெளிவாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இதற்கு பதிலடி கொடுக்க சீனாவும் தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடிக்கும் சூழல் உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது சீனாவில் உள்ள அமெரிக்க அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், சீனாவில் உள்ள அமெரிக்கா ஒப்பந்ததாரர்கள் சீனா மக்களுடன் காதலிக்க கூடாது. அதேபோல் அவர்களுடன் பாலியல் உறவை வைத்து கொள்ள கூடாது என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா - சீனா இடையேயான உறவில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா பிறப்பித்த வித்தியாசமான உத்தரவு தான் காரணம். அந்த உத்தரவு என்பது சீனாவில் உள்ள அமெரிக்க அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், ஒப்பந்ததாரர்கள் சீன மக்களுடன் காதல் மற்றும் பாலியல் ரீதியான உறவை தடை செய்கிறது. இந்த உத்தரவு என்பது கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை சீனாவில் மொத்தம் 5 தூதரகங்கள் உள்ளன. பெய்ஜிங்கில் தலைமை தூதரகம் உள்ளது. இதுதவிர குவாங்சோ, ஷாங்காய், ஷென்யாங் மற்றும் வுஹான் உள்ளிட்ட இடங்களில் அமெரிக்காவின் துணை தூதரகங்கள் உள்ளன. அதேபோல் ஹாங்காங்கில் உள்ள துணை தூதரகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தூதரகங்களுக்கு இந்த உத்தரவு என்பது போடப்பட்டுள்ளது. இந்த தூதரக அலுவலகங்களில் அமெரிக்காவை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் பணியாற்றி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இந்த உத்தரவின் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது கடும் மோதல் உள்ளது. வரி விதிப்பு விவகாரம் என்பது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் தான் சீனாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகள், ஊழியர்களை ‛ஹனிடிராப்பில்'சிக்க வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹனி டிராப் என்பது அமெரிக்க அதிகாரியுடன் பெண் ஒருவரை நெருக்கமாக பழக வைத்து, அவர்கள் சேர்ந்து இருப்பதை வீடியோ, போட்டோவாக எடுத்து மிரட்டி தங்களுக்கு தேவையானவற்றை சாதித்து கொள்வது தான்.
அந்த வகையில் சீனாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகள், ஊழியர்கள் ஹனிடிராப்பில் சிக்க வைத்து அவர்கள் மூலம் முக்கிய தகவல்களை பெற சீனா முயற்சிக்கலாம் என்ற அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவை அதிரடியாக பிறப்பித்துள்ளது என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications