கழற்றிவிடும் டிரம்ப்.. யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த எலான் மஸ்க்! ஆரம்பமே இப்படியா!
நியூயார்க்: அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்ற உடன், மின்சார வாகனங்கள் கட்டாயமில்லை என்று அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். இது எலான் மஸ்க் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
எலக்ட்ரிக் கார்களை வாங்கியவர்கள் மீண்டும் பெட்ரோல், டீசல் கார்களை நோக்கி நகர்வதாக கடந்த ஆண்டு பேச்சு அடிபட்டது. x தளத்தில் இது தொடர்பான பதிவுக்கு பதில் அளித்திருந்த எலான் மஸ்க், "நீங்க ஒன்னும் கவலை படாதீங்க. எதிர்காலத்தில் 99% கார்கள் எலக்ட்ரிக் கார்களாகத்ததான் இருக்கும். தப்பி தவறி ஒரு சில கார்கள் பெட்ரோல், டீசலில் இயங்குவதாக இருக்கலாம். ஆனால், அதெல்லாம் அந்த காலத்து பட்டன் மொபைல்களை போல மக்களால் பார்க்கப்படும்" என்று கூறியிருந்தார்.

அதாவது இனி எல்லாமே மின்சார வாகனங்கள்தான் என்று மஸ்க் நம்பியிருந்தார். அவ்வளவு ஏன் 2025ல் டெஸ்லா புதிய மின்சார கார்களை தயாரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தது. ஆனால் இதில் ஒரு லோடு மண்ணை வாரி கொட்டிவிட்டார் அதிபர் டிரம்ப்.
நேற்று முன்தினம் அவர் அதிபராக பதவியேற்று, தனது முதல் உரையில் "இனி அமெரிக்காவில் மின்சார வாகனங்கள் மட்டும்தான் என்கிற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. மக்கள் எந்த வாகனங்களை விரும்புகிறார்களோ அதையே பயனப்படுத்தலாம்" என்று அதிரடியாக அறிவித்தார். அப்போது எலான் மஸ்க்கின் முகத்தை பார்க்க வேண்டுமே.. எலான் மஸ்க்குக்கு என்ன நடக்கிறது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை.
பைடன் ஆட்சியில் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது 2030 வரை அமெரிக்காவில் விற்பனையாகும் கார்களில் பாதிக்கு பாதி மின்சார கார்களாக மட்டுமே இருக்க வேண்டும். மின்சார கார்களை புதியதாக வாங்குபவர்களுக்கு $ 7,500 வரை மானியம் அளிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ.6.48 லட்சம். அதேபோல பயன்படுத்திய மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு $ 4,000 வரை (ரூ.3.45 லட்சம்) மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதையெல்லாம் பார்த்துதான் மஸ்க், மின்சார வாகன தயாரிப்பில் குஷியாக இறங்கியிருந்தார். ஆனால் இனி இந்த மானியம் எல்லாம் நிறுத்தப்படும்.
மானியத்திற்கு பதிலாக, பெட்ரோல் கார் வேணுமா? வாங்கிக்கோங்க. டீசல், சிஎன்ஜி ஆகியவற்றால் இயங்கும் கார் வேணுமா தாராளமா வாங்கிக்கோங்க என்று டிரம்ப் தடாலடியாக கூறியிருக்கிறார்.
இதனால் மின்சார வாகன உற்பத்திற்காக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும், மேலும் தொடர்வதா? வேண்டாமா? என்கிற மனநிலைக்கு மஸ்க் தள்ளப்பட்டிருக்கிறார். இது டிரம்புடனான மோதலாக கூட வெடிக்க வாய்ப்பு இருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விமர்சித்திருக்கின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அள்ளி அள்ளி நிதி கொடுத்து, நேரடியாக போய் பிரசாரம் மேற்கொண்ட எலான் மஸ்க்குக்கு இது தேவைதான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தன்னை நம்பி வந்தவர்களை டிரம்ப் கழற்றி விடுவது இது ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே இதற்கு முன்னர் டிரம்ப் 2017-2021 காலத்தில் அதிபராக பதவி வகித்தபோது, தனக்கு வேண்டியவர்களை எல்லாம் அரசின் முக்கிய பொறுப்பில் போட்டு வைத்திருந்தார். ஆனால் டிரம்ப்புடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர்கள் கொஞ்ச நாட்களிலேயே கழன்றுவிட்டனர். அதேபோன்று இந்த முறையும் நடக்கும் என்றும் பேச்சுகள் அடிபடுகின்றன. அதில் முதல் ஆளாய் மஸ்க்தான் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications