ஆப்கான் நிலைமை தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரெஸுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை!
நியூயார்க்: ஆப்கானிஸ்தான் நிலைமைகள் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் அந்நாடு முழுவதும் தற்போது தாலிபான்கள் வசமாகி உள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் ஆப்கான் நிலைமை தொடர்பாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டமும் நேற்று ஆப்கானிஸ்தான் நிலைமைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. பின்னர் சர்வதேச சமூகத்தின் கவலையையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளிப்படுத்தி இருந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு நடப்பு ஆகஸ்ட் மாதம் இந்தியாதான் தலைமை வகித்து வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றிருந்தார். இதனிடையே ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆப்கான் நிலைமைகள் குறித்து விவாதித்தார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளருடனான சந்திப்பு சுமூகமானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென்னுடனும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அப்போது காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி இருந்தார்.
அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உயர்நிலை கூட்ட விவாதம் நடைபெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications