75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை அமெரிக்காவில் பறக்கவிட முடிவு.. அரசு எடுத்த ரிஸ்க்.. ஏன் இப்படி?
நியூயார்க்: அமெரிக்காவில் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை பறக்கவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. புளோரிடா மாகாணத்தில் இந்த கொசுக்களை பறக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா காரணமாக மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது. சீனாவில் புபோனிக் பிளேக் என்ற இன்னொரு நோயும் பரவி வருகிறது. மனித குலமே நோய்களாலும், வைரஸ்களால் அச்சத்தில் நடுங்கி போய், வீட்டில் முடங்கி உள்ளது.
உலகமே இப்படி திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் அமெரிக்கா கொசுக்களை வைத்து விஷ பரீட்சை ஒன்றை செய்கிறது. அந்நாட்டு அரசின் முழு அனுமதியோடு, அங்கு கொசுக்களை பறக்க விட போகிறார்கள்.
வரலாற்றில் முதல் முறை.. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஏற்றப்படும் இந்திய தேசியக் கொடி
என்ன திட்டம்
இந்த திட்டம் என்ன என்று தெரிந்து கொள்ளும் முன், கொசுக்களை குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கொசுக்களில் பெண் கொசுக்கள் மட்டுமே கடிக்கும் குணம் கொண்டது. பெண் கொசுக்கள் மட்டுமே முட்டை போடும். இந்த முட்டை இடுவதற்கு ரத்தம் தேவை என்பதால், இந்த கொசுக்கள் மட்டுமே கடிக்கும் குணம் கொண்டது. ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிக்காது.
நோய்களை பரப்பும்
இந்த பெண் கொசுக்கள் நம்மை கடிக்கும் போது நமக்கு நோய் பரவுகிறது. ஸிகா வைரஸ் தொடங்கி டெங்கு வரை பல விதமான நோய்கள் இந்த பெண் கொசுக்கள் மூலம்தான் பரவுகிறது. அதிலும் ஏடிஸ் வகை கொசுக்கள் மிகவும் ஆபத்தானது. இந்த வகையை சேர்ந்த பெண் கொசுக்கள் அதிக அளவில் நோய்களை பரப்புகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை காலி செய்யவே அமெரிக்க அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஏன் இந்த திட்டம்
இந்த திட்டம் மூலம் சோதனை மையத்தில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கி உள்ளனர். மொத்தம் 75 கோடி கொசுக்களை உருவாக்கி உள்ளனர். இந்த கொசுக்கள் முழுக்க முழுக்க ஆண் கொசுக்கள் ஆகும். இந்த ஆண் கொசுக்கள் மூலம் பெண் கொசுக்களை உருவாகாமல் தடுக்க போகிறார்கள். இந்த ஆண் கொசுக்கள் புளோரிடாவில் விடப்பட உள்ளது.
மொத்தமாக அழியும்
இதனால் பெண் கொசுக்கள் முட்டையிடாமல் அழிந்து போகும். சில வருடங்களில் மொத்தமாக பெண் கொசுக்கள் இல்லாமல் முற்றிலுமாக அழிந்து போகும் நிலைமை ஏற்படும். இதன் மூலம் ஆண் கொசுக்கள் மட்டும் இருக்கும். ஆனால் அது மனிதர்களை கடிக்காது. அதோடு மனிதர்களுக்கு நோயும் பரவாது. மொத்தமாக டெங்கு தொடங்கி எந்த விதமான நோயும் இல்லாத நிலைமை ஏற்படும்.
கடும் எதிர்ப்பு
இதைத்தான் புளோரிடாவில் இந்த வருட இறுதியில் செய்ய உள்ளனர். கேட்கவே ஆச்சர்யமாகவும், அதே சமயம் திகிலாகவும் இருக்கிறதா? ஹாலிவுட் படங்களிலும், காப்பான் படத்திலும் பார்த்தது போலவே உள்ளது அல்லவா? ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்த 75 கோடி ஆண் கொசுக்கள் அதற்கு பின் என்ன ஆகும். இவ்வளவு கொசுக்களை வெளியே விடுவது சுகாதார கேடாக மாறாதா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.
கடும் எதிர்ப்பு
இதற்கு அமெரிக்க அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதற்கு எதிராக புளோரிடா மக்கள் கொதித்து எழுந்து உள்ளனர். எங்களுக்கு இப்படிப்பட்ட திட்டம் வேண்டாம். இது இயற்கைக்கு எதிரானது என்று அப்பகுதி மக்கள் கொதித்து போய் உள்ளனர். இப்படிப்பட்ட விஷ பரீட்சை மனித குலத்தின் அழிவிற்கு வழி வகுக்கும் என்று புளோரிடா மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.