அமெரிக்கா நாசமாயிடும்! H1B விசா கெடுபிடியால் எகிறும் எதிர்ப்பு.. ட்ரம்புக்கு எதிராக கோர்ட்டில் வாதம்
நியூயார்க்: அமெரிக்காவில் வெளிநாட்டு ஐடி ஊழியர்கள் வழங்கப்படும் எச்1பி விசா விதிமுறைகள் திடீரென கடுமையடைந்துள்ள நிலையில், இதற்கான கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத உயர்வு, அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பொறியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்1பி விசாவுக்கான கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பொறியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக, வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் எச்1பி (H-1B) விசாவுக்கான விதிமுறைகள் திடீரென கடுமையாக்கப்பட்டுள்ளன.
விசாவுக்கான கட்டணமும் ரூ.1.32 லட்சத்திலிருந்து நேரடியாக ரூ.88 லட்சம் வரை (அதாவது 1 லட்சம் அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை செய்ய வெளிநாட்டிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான வேலை அனுமதி ஆகும்.

எச்1பி விசா கட்டணம்
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக மென்பொருள் பொறியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மத போதகர்கள் இந்த விசாவைப் பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவில் தற்போதுள்ள எச்1பி விசா வைத்திருப்போரில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்த துறைகளில் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப், "அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்" என்ற காரணத்தைக் கூறி, கடந்த ஆட்சிக் காலத்தில் எச்1பி விசா கட்டணத்தை 2,000 டாலரிலிருந்து முதலில் 5,000 டாலராக உயர்த்தினார்.
ஜோ பைடன் முடிவு
அதனை அடுத்து அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் ரத்து செய்த நிலையில், மீண்டும் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், அவரது புதிய உத்தரவின் படி, அதை 1 லட்சம் டாலராக உயர்த்தியிருப்பது உலக தொழில்நுட்ப உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திடீர் உயர்வு காரணமாக, அமெரிக்காவில் வேலை செய்ய நினைக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாமல், இந்திய ஐடி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தான். ட்ரம்ப் அரசின் இந்த முடிவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் இணைந்து சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம்
சுகாதார நிறுவங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து தாக்கல் செய்த மனுவில், "இந்த விசா திட்டம் அமெரிக்காவின் புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தூணாக உள்ளது. இதை திடீரென இவ்வளவு உயர்த்துவது மருத்துவமனைகள், தேவாலயங்கள், பள்ளிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். முக்கிய துறைகளில் திறமையாளர்களை அமெரிக்கா இழக்க நேரிடும்" என்று வாதிட்டுள்ளனர்.
இந்திய ஐடி அதிர்ச்சி
இந்திய ஐடி துறைக்கு அமெரிக்கா மிகப்பெரிய வேலைவாய்ப்பு மையம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் எச்1பி விசாவை பெற்று அமெரிக்காவில் வேலை பெறுகின்றனர். ஆனால் தற்போது உள்ள கட்டண உயர்வு மற்றும் கடுமையான நிபந்தனைகள் காரணமாக பலரும் இந்த விசாவுக்குத் தகுதி பெற முடியாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் வணிக மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையும், அமெரிக்காவில் பணியாற்றும் கனவு பலருக்கு சாத்தியமற்றதாக மாறும் நிலையும் உருவாகலாம் என்கின்றனர் உலக அரசியலைக் கவனிக்கும் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications