அமெரிக்காவையும் விடாத மூட நம்பிக்கை.. சூரிய கிரகணத்தன்று பள்ளிகளுக்கு லீவு! காரணத்தை கேளுங்க
நியூயார்க்: சூரிய கிரகணம் குறித்து பல்வேறு மூடநம்பிக்கைகள் உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் சூரிய கிரகணத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
குரங்கிலிருந்து மனிதர்கள் பரிணாமமடைய தொடங்கிய காலத்தில், அவர்கள் வானத்தை பார்த்துதான் காலத்தை புரிந்துக்கொண்டார்கள். மழை, குளிர், கோடை, வேணிற் என எல்லா காலங்களையும் வானத்தில் நடக்கும் மாற்றங்களை கண்டுதான் புரிந்துக்கொண்டார்கள். ஆண்டின் தொடக்கமும், முடிவும் வானமே அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தது. இப்படி இருக்கையில் அவர்கள் கிரகணங்களையும் பார்க்க தொடங்கினார்கள்.

பிரகாசமான சூரிய ஒளி திடீரென மறைவது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. ஏனெனில், அந்த காலத்தில் மின்சாரமோ, அதன் மூலம் இயங்கும் பல்புகளோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, இருட்டு என்றாலே ஒருவித அச்சம் மனிதர்களை கவ்விக்கொள்ளும். அதேபோலத்தான் சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் இருட்டும் மனிதர்களை பயமுறுத்தியது.
எனவே, ஏறத்தாழ உலகின் அனைத்து மனித குழுக்களிடமும் சூரிய கிரகணம் என்பது துர் சம்பவங்களாகவே பாவிக்கப்பட்டது. அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட சாஸ்திர, சம்பிரதாயங்களிலும் இது கெட்ட சகுனமாகவே எழுதப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை பாம்பு சூரியனை விழுங்குவதால் சூரிய கிரகணம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. சீனாவில் வானத்தில் உள்ள டிராகன் சூரியனை விழுங்குவதாக சொல்லப்படுகிறது.
தாய்லாந்தில், ராகு எனும் பாம்பு சூரியனை விழுங்குவதாக சொல்லப்படுகிறது. நாய்கள் சில சூரியனை திருட முனையும் கதை கொரிய நாடுகளில் சூரிய கிரகணத்திற்கு சொல்லப்படுகிறது. ஜப்பானில், சூரிய கிரகணத்தின்போது வானத்திலிருந்து விஷம் விழும் என்று நம்பப்படுகிறது.
இப்படி சூரிய கிரகணத்தின்போது ஏராளமான மூட நம்பிகை சார்ந்த விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதேபோல சூரிய கிரகணம் தொடங்கியது முதல் முடிவது வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது, கர்ப்பிணிகள் வெளியே வராமல் இருப்பது என இன்றும் இந்த மூடநம்பிக்கைகள் தொடர்கின்றன.
ஆனால், ஆச்சரியம் என்னவெனில், அமெரிக்காவில் சூரிய கிரகணத்திற்கு பல்வேறு மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8ம் தேதி நடக்கிறது. மெக்சிகோவில் தொடங்கி, முழு அமெரிக்காவை கடந்து, கனடா வரை சூரிய கிரகணம் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, குறிப்பிட்ட நேரம் வரை ஏப்ரல் 8ம் தேதி அமெரிக்காவின் பகல் பொழுது மங்கலாகவே இருக்கும். எனவே பள்ளிகளுக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விடுமுறைக்கான தெளிவான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும், சூரிய கிரணத்திற்காகவே விடுமுறை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிரகணத்தை காண பொதுமக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்றும், எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் விடுமுறை அறிவிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி, இல்லினாய்ஸ், கென்டக்கி, இந்தியானா, ஓஹியோ, பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மைனே ஆகிய மாகாணங்களில் கிரகணம் முழுமையாக தெரியும். இந்த மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா போன்ற மத நம்பிக்கைகள் அதிகம் கொண்ட நாடுகளில் இன்றும் சூரிய கிரகத்தை கண்டு அஞ்சுவது இருந்தாலும், பலரும் சூரிய கிரகத்தின் பின்னால் இருக்கும் அறிவியலை அறிந்துக்கொண்டு, அதை ரசிக்க தொடங்கியுள்ளனர். ஆனால், அமெரிக்காவில் இதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications