யுத்தத்தை நிறுத்துங்க- பேச்சுவார்த்தை நடத்துங்க... உக்ரைன், ரஷ்யாவுக்கு ஐ.நா-விடம் இந்தியா வேண்டுகோள்
நியூயார்க்: யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன், ரஷ்யாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவில் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா பேசியதாவது:
யுத்தத்தை நிறுத்தும் வகையில் பேச்சு வார்த்தைகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். இது தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா பேசிவருகிறது. நாங்கள் தொடர்ந்து இருதரப்பையும் தொடர்பு கொண்டு பேசுகிறோம்.

ரஷ்யா, உக்ரைன் மோதல்கள், இரு தரப்பிலும் மனித உயிரிழப்புகள் குறித்து இந்தியா கவலை தெரிவிக்கிறது. இந்த யுத்தம் மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. உக்ரைனின் மீதான யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதனையே இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இருதரப்பும் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார், இரு தரப்பும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

Recommended Video
உக்ரைன் யுத்தத்தை தொடர்ந்து 22,500 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். இந்தியர்களை அழைத்து வரும் எங்களின் முயற்சிகளுக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இவ்வாறு ரவீந்தரா கூறினார்.












Click it and Unblock the Notifications