அடி தூள்! அமெரிக்க இடைக்கால தேர்தல்.. வெற்றி கொடி நாட்டும் இந்திய வம்சாவளியினர்! அடுத்தடுத்த வெற்றி
நியூயார்க்: நடந்து முடிந்த அமெரிக்க இடைத் தேர்தலில் மேரிலேண்ட் பகுதியின் துணைநிலை ஆளுநராக அருணா மில்லர் எனும் இந்திய அமெரிக்கர் தேர்வாகியுள்ளார்
அதேபோல பென்சில்வேனியா மாநில பிரதிநிதிகள் சபைக்கு அரவிந்த் வெங்கட் எனும் இந்திய அமெரிக்கர் தேர்வாகியுள்ளார்.
இதன் மூலம் துணை ஆளுநர் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகும் முதல் இந்திய அமெரிக்கர் எனும் பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
இந்த இடைத் தேர்தலில் அமெரிக்க பிரநிதிகள் சபைக்கு எட்டு இந்திய வம்சாவளியினர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் ஆளும் 'ஜனநாயக கட்சியை' சேர்ந்தவர்களாவார்கள்.
அமெரிக்க இடைத்தேர்தல்
அமெரிக்கா நாடாளுமன்றமானது பிரநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரு அவைகளை கொண்டுள்ளது. அந்நாட்டு அதிபரின் ஆட்சிக்காலம் 4 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், இந்த அவை உறுப்பினர்களுக்கான தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இதில் செனட் சபையின் உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளாகும். பிரதிநிதி சபை உறுப்பினர்களுக்கான பதவி காலம் 2 ஆண்டுகள். இந்நிலையில் மொத்தமுள்ள 435 பிரதிநிதிகள் இடங்களுக்கும், 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
துணைநிலை ஆளுநர்
இந்நிலையில் House District 30 பிரதிநிதி சபை தொகுதியில் போட்டியிட்ட 'ஜனநாயக கட்சியை' சேர்ந்த இந்திய அமெரிக்கர் அரவிந்த் வெங்கட் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல மேரிலேண்ட் பகுதியின் துணைநிலை ஆளுநர் பதவிக்கு வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கர் அருணா மில்லர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்திய அமெரிக்கர் ஒருவர் துணை நிலை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இதனையடுத்து இந்த தேர்தலில் இந்திய அமெரிக்கர்கள் அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் வெற்றி
அதேபோல இல்லினாய்ஸ் மாநில பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இல்லினாய்ஸின் 8வது காங்கிரஸ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் டெல்லியில் பிறந்த இவர், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். அமெரிக்காவில் பல்வேறு அரசாங்க பொறுப்புகளில் இருந்து வந்த நிலையில் கடைசியாக மாநில துணைப் பொருளாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதேபோல கடந்த 2012ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுகையில் தோல்வியுற்றார். ஏற்கெனவே இரண்டு இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றிருந்த நிலையில் இது மூன்றாவது வெற்றியாகும்.
கலிபோர்னியா
இதனையடுத்து நான்காவது வெற்றியை கலிபோர்னியாவின் 17வது காங்கிரஸ் மாவட்டத்தில் பதிவு செய்துள்ளார் இந்திய வம்சாவளியான ரோ கன்னா. இவரைத் தொடர்ந்து வாஷிங்டனின் 7வது காங்கிரஸ் மாவட்டத்தில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளியான பிரமிளா ஜெயபால் வெற்றி பெற்றுள்ளார். பிரமிளா ஜெயபால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் கிளிஃப் மூனை 1,13,174 (84.7%) வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.
முன்னிலை
அதேபோல மிச்சிகனின் 13வது மாவட்டத்தில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான ஸ்ரீனிவாஸ் தானேதர், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட மார்டெல் பிவிங்ஸை விட 52,815 (72.3%) வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து கலிபோர்னியாவின் 6வது மாவட்டத்தில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியான 'அமி பெரா' வாக்கு எண்ணிக்கையில் தற்போது முன்னிலையில் உள்ளார். எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியின் அதிகமானோர் வெற்றி பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.