இனி ஆன்சைட் போகவே முடியாது.. ஐடி ஊழியர்களுக்கு செக்.. IT நிறுவனங்கள் எடுத்த பயங்கர முடிவு?
நியூயார்க்: அமெரிக்க H-1B விசா கட்டணங்கள் 100,000 டாலராக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இனி ஆன்சைட் பணிகளை குறைக்க போவதாக அந்த நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
இனி அமெரிக்க H-1B விசா மீதான தங்களின் சார்புநிலையைக் கணிசமாகக் குறைத்து, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான பணிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரப் போவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதாவது ஆன்சைட் பணிகளை இனி செய்ய போவது இல்லை.. அல்லது குறைக்க போகிறோம் என்று அறிவித்து உள்ளன.

இனி ஆன்சைட் பணிகள் இல்லை
சனிக்கிழமை அன்று அமெரிக்க அரசு இந்த திடீர் கட்டண உயர்வை அறிவித்தது. H-1B விசாவைப் பெறும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது, ஏனெனில் கிட்டத்தட்ட 71% விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. ஒரு நபருக்கு 88 லட்சம் ரூபாய் வரை கொடுத்து அமெரிக்கா கொண்டு செல்ல முடியாது. அது பல ஊழியர்களின் ஆண்டு சம்பளத்தை விட அதிகம். இத்தனை காலம் இது வெறும் 1 லட்சம் ரூபாயாக இருந்தது.
இதனால் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து பணிகளை இந்தியாவுக்கு மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வால் ஏற்படும் செலவுகளைத் தவிர்க்க முடியும் என்றும், இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் டிரம்பின் H-1B விசா திட்ட சீர்திருத்தம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களையும், திறமையான நிபுணர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க நிர்வாகம் எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக உயர்த்துவதாக அறிவித்தது. எச்-1பி திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து நூறாயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. தற்போது இதற்கு டிரம்ப் செக் வைத்துள்ளார்.
எச்-1பி விசா
எச்-1பி விசா மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இதை ஒருமுறை புதுப்பித்து மொத்தம் ஆறு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். விண்ணப்பதாரர்கள் அமெரிக்க முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 65,000 விசாக்கள் என்ற உச்சவரம்பு உள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து மேம்பட்ட பட்டம் பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. அதிக தேவை காரணமாக, விசாக்கள் பொதுவாக லாட்டரி முறை மூலம் ஒதுக்கப்படுகின்றன.
எச்-1பி விசா பெறுபவர்கள் யார்?
எச்-1பி திட்டம் முக்கியமாகத் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பிற சிறப்புத் துறைகளில் பணிபுரியும் உயர் திறன்கொண்ட வெளிநாட்டு நிபுணர்களுக்குப் பயனளிக்கிறது.
2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட எச்-1பி விண்ணப்பங்களில் 70% க்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. சீனர்கள் இரண்டாவது பெரிய குழுவாக உள்ளனர். இவர்கள் சுமார் 11% விசாக்களை பெற்றுள்ளனர்.
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை, சுமார் 400,000 எச்-1பி விசாக்களில் 72% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ உள்ளிட்ட முன்னணி இந்திய ஐ.டி நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் சுமார் 20,000 ஊழியர்களுக்கு விசா வழங்கி உள்ளது. இப்போது புதிய விதியால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications