மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக கடுமையான மோதல்களும் போர்ச் சூழலும் நிலவி வந்தன. இந்நிலையில், உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தன் வசம் உள்ள, அணு ஆயுதங்கள் செய்யப் பயன்படும் மிக முக்கிய பொருளான 'செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை' (Enriched Uranium) முழுமையாக ஒப்படைக்க ஈரான் கொள்கை அளவில் சம்மதித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் (The New York Times) பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

யுரேனியம் என்றால் என்ன? ஈரான் ஏன் அதைத் தருகிறது?
புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், யுரேனியம் என்பது ஒரு வகையான வேதிப்பொருள். இதைச் சுத்திகரித்து (அதாவது செறிவூட்டி) மிகத் சக்திவாய்ந்த அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும். ஈரானிடம் இருக்கும் இந்த யுரேனியத்தை வைத்துக் கொண்டு அவர்களால் பல அணு ஆயுதங்களைச் செய்ய முடியும் என்று அமெரிக்கா பயந்தது. இதனால் தான் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகப் போர் மூளும் அபாயம் இருந்தது.
தற்போது அமெரிக்காவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில், அந்தப் ஆபத்தான யுரேனியப் பொருட்களைத் தங்களிடமிருந்து அகற்றிவிட ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை 'அணுசக்தித் தூசு' (Nuclear Dust) என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்க விடாமல் தடுப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய சமாதான ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக நடக்க வாய்ப்புள்ளது:
முதல் கட்டம்: இரு நாடுகளுக்கும் இடையேயான போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வருவது.
இரண்டாம் கட்டம்: உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) கடல் வழியை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பது.
மூன்றாம் கட்டம்: அடுத்த 30 நாட்களுக்குள் இரு நாடுகளும் அமர்ந்து மற்ற பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' வலைத்தளப் பக்கத்தில், இந்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், இதன் மூலம் மூடப்பட்ட கடல் வழிகள் திறக்கப்பட்டு உலக நாடுகளின் வணிகம் சீராகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரான் காட்டும் தயக்கம் மற்றும் எச்சரிக்கை
ஒப்பந்தத்திற்குச் சம்மதித்தாலும், அமெரிக்காவை ஈரான் முழுமையாக நம்பவில்லை. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் பேசுகையில், "அமெரிக்கா ஒரு நாணயமான நாடு கிடையாது. எங்களுடைய நாட்டின் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா மட்டும் பேச்சுவார்த்தையை மீறி மீண்டும் முட்டாள்தனமாகப் போரைத் தொடங்கினால், ஈரானின் பதிலடி முன்பை விட மிகக் கொடூரமாகவும் கசப்பாகவும் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி கூறுகையில், "மத்தியஸ்தர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போதைக்கு மீண்டும் அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் தடுப்பதும், லெபனான் போன்ற அண்டை நாடுகளில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுமே எங்களின் முதல் வேலை" என்று கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் உலகிற்கு என்ன லாபம்?
இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறினால், ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு, அவர்கள் உலக நாடுகளுக்குத் தாராளமாக கச்சா எண்ணெயை (Oil) விற்க முடியும். அதேபோல், போர் நின்றால் உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையும் கட்டுக்குள் வரும். ஒருவேளை இந்த யுரேனியம் விஷயத்தில் ஈரான் ஏமாற்ற நினைத்தால், மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே, இந்த ஒப்பந்தத்தின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications