150 ஆண்டுகள் ஆனபோதும் மவுசு குறையாத ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி.. ரூ. 59 லட்சத்திற்கு ஏலம்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி மற்றும் அவரது படுகொலை பற்றிய இரத்தக் கறை படிந்த தந்தி ரூ.59 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி ரூ.59 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன். அடிமை முறைக்கு எதிராக குரல் கொடுத்த அமெரிக்க தலைவர்களில் ஆப்ரஹாம் லிங்கன் முக்கியமானவர். 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865இல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்.

ஆப்ரஹாம் லிங்கன் கடந்த 1865ம் ஆண்டு வாஷிங்டன் டி. சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.
பிரேத பரிசோதனையின் போது லிங்கனின் சுமார் 5 சென்டிமீட்டர் நீளமுள்ள முடி சேகரித்து வைக்கப்பட்டது. மேலும் அவரது படுகொலை பற்றிய இரத்தக் கறை படிந்த தந்தியும் அதனுடன் சேகரிக்கப்பட்டிருந்தது.
இந்த தலைமுடி மற்றும் தந்தி ஆகியவை போஸ்டன் நகரில் கடந்த சனிக்கிழமை ஏலத்தில் விடப்பட்டன. ஆப்ரஹாம் லிங்கனின் தலைமுடி மற்றும் ரத்தக்கறை படிந்த தந்தியை 81,000 அமெரிக்க டாலருக்கு, அதாவது இந்திய மதிப்புபடி ரூ.59,40,540க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.
ஏலம் எடுத்தவர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சுமார் 150 ஆண்டுகளாக பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்த ஆப்ரஹாம் லிங்கனின் தலைமுடி ஏலத்தில் விடப்பட்ட செய்தி அமெரிக்கா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications