50 ஆண்டுக்கு பிறகு நடந்த அதிசயம்! அதென்ன பிரவுன் கலர்ல? ஒட்டகச்சிவிங்கியை வியப்பாக பார்க்கும் மக்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள பிரைட் உயிரியல் பூங்காவில் அதிசய ஒட்டகச்சிவிங்கி ஒன்று பிறந்திருக்கிறது. புதியதாக பிறந்துள்ள இந்த குட்டியின் உடலில் புள்ளிகளே இல்லை என்பதுதான் அந்த அதிசயம்.
உலகின் மிகவும் தனித்துவமான உயிரினங்களில் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாகும். ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த உயிரினங்கள் வாழ்கின்றன. ஆப்பிரிக்கா தவிர மற்ற நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் ஒட்டகச்சிவிங்கிகள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவைதான். இந்த உயிரினங்கள் பொதுவாக 16-18 அடி உயரம் வரை வளரும். இதன் தனித்துவமே உயரமும், அதன் உடலில் இருக்கும் புள்ளிகளும்தான்.

எல்லா ஒட்டகச்சிவிங்கிகளுக்கும் உடலில் புள்ளிகள் இருக்கும். இவை எல்லாம் பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தாலும், அவைகள் மனிதனின் கைவிரல் ரேகைகளை போல தனித்துவமானவையாகும். ஆனால் தற்போது பிரைட் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள ஒரு ஒட்டகச்சிவிங்கி குட்டியானது புள்ளிகளே இல்லாமல் வெறுமென பிரவுன் நிறத்தில் பிறந்திருக்கிறது. இது ஓர் அதிசயமான குட்டியாகும். இதே போல கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் இதே போன்று ஓர் ஒட்டகச்சிவிங்கி குட்டி புள்ளிகள் இல்லாமல் பிறந்தது.
அதற்கு பின்னர் தற்போதுதான் இந்த குட்டி பிறந்திருக்கிறது. எனவே மக்கள் இதனை ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். இது குறித்து உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், "இந்த குட்டி கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தது. பிரசவம் பார்த்த எங்களுக்கே இது ரொம்ப ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இது போன்ற ஒரு ஒட்டகச்சிவிங்கியை நாங்கள் யாரும் பார்த்தது கிடையாது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் இதே போன்ற குட்டி ஒன்று பிறந்ததாக சொல்கிறார்கள்.
எனவே இந்த அபூர்வ ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. சமீப காலங்களாக ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது வரை ஒட்டகச்சிவிங்கிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 40 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளன" என்று கூறியுள்ளார். இந்த வகை உயிரினங்கள் நின்றுக்கொண்டே குட்டியிடும் தன்மை கொண்டதாகும். இந்த குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே எழுந்து நின்று நடக்க தொடங்கிவிடும்.
ஆனால் ஒவ்வொரு முறை இவைகள் குட்டியை ஈனும்போது அதிலிருந்த 25-50% குட்டிகள் மட்டுமே உயிருடன் வளர்கின்றன. மற்ற குட்டிகள் சிங்கம், காட்டு நாய்கள், கழுதைப்புலிகள் போன்றவற்றால் கொல்லப்படுகின்றன.
இந்நிலையில் பிரைட் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள இந்த அதிசய ஒட்டகச்சிவிங்கி குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக ஆன்லைனில் வாக்கெடுப்பையும் நிர்வாகம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications