உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன், ரோஷினி நாடார்! போர்ப்ஸ் இதழ் வெளியீடு
நியூயார்க்: உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் நிர்மலா சீதாராமன், எச்.சி.எஸ். டெக் தலைவர் ரோஷினி நாடார் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 6 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக இடம்பிடித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது தொடர்ந்து 4-வது முறையாகவும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுயநலம்.. பெரிய பதவி கொடுக்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தாரு.. போட்டு உடைத்த ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ!
சக்திவாய்ந்த பெண்கள்.. முதலிடத்தில் யார்?
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழ் (Forbes), ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியல், செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியல், சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில் உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் இன்று வெளியிட்டது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான ஊர்சுலா வாண்டர் லியன் பிடித்திருக்கிறார். உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று காலத்தில் அவர் ஆற்றிய பணிகள், அவரது ஆளுமையை பதிவு செய்த விதத்தை அடிப்படையாக கொண்டு அவருக்கு இப்பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் கமலா ஹாரிஸ்
இந்தப் பட்டியலில் அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். இவர்களை தவிர, இந்தப் பட்டியிலில் 39 தலைமைச் செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீஸ்வரர்கள் இடம்பிடித்து இருக்கின்றனர்.
36-வது இடத்தில் நிர்மலா சீதாரமன்
இந்நிலையில், மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 36-வது இடத்தை பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இப்பட்டியலில் நிர்மலா சீதாராமன் 37-வது இடத்தில் இருந்தார். கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் அவர் முறையே 34 மற்றும் 41 ஆகிய இடங்களை அவர் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் இடம்பிடித்த ரோஷினி நாடார்
இந்தப் பட்டியலில் நிர்மலா சீதாரமன் உட்பட 6 இந்தியர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். எச்.சி.எல். தலைவர் ரோஷினி நாடார் 53-வது இடத்தை பிடித்திருக்கிறார். செபி தலைவர் மாதவி புரி 54-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணையத் தலைவர் சோமா மண்டல் 67-வது இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள். இதேபோல, பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் 72-வது இடத்திலும், நியாகா நிறுவனர் பால்குனி நாயர் 89-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களில் ரோஷினி நாடார், கிரண் மஜும்தார், பால்குனி நாயர் ஆகியோர் கடந்த ஆண்டிலும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.