முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்? திடீரென ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பென்டகன் தலைவர் பேச்சு!
நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா 28 மாதங்களுக்கும் மேலாக போரை நடத்தி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் பென்டகன் தலைவர், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ஃபோனில் பேசியிருக்கிறார். இந்த உரையாடல் போரை முடிவுக்கு கொண்டு வருமா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் காலங்காலமாக பஞ்சாயத்துகள் வெடித்து வருகின்றன. இப்பபோது நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போருக்கு காரணமும் அமெரிக்காதான். இப்படி இருக்கையில் இன்று திடீரென ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம், அமெரிக்காவின் பென்டகன் தலைவர் பேசியிருக்கிறார். என்ன பேசினார்கள் என்பது குறித்து இரண்டு நாடுகளும் இரு வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா தரப்பில் பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின், "இரு நாடுகளுக்கும் இடையில் வெளிப்படையான பேச்சுவார்த்தை அவசியமாக இருக்கிறது" என்கிற கருத்தை முன்வைத்ததாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் விமானப்படை மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மறுபுறம், "உக்ரைன் போர் 28 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்க சப்ளை செய்யும் ஆயுதங்கள்தான். எனவே இந்த ஆயுத சப்ளை குறித்து கடுமையாக எச்சரித்திருக்கிறோம். இந்த ஆயுத உதவி நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் கூறியுள்ளோம்" என ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவ் பேசியதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா சமீபத்தில்தான் உக்ரைனுக்கு ரூ.5 லட்சம் கோடி அளவுக்கான ஆயுத உதவிகளை வழங்க அனுமதித்திருந்தது. இப்படியாக வாங்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் கிரிமியன் தீபகற்பத்தின் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 4 ரஷ்யர்கள் உயிரிழந்தனர். இதற்கு அமெரிக்க நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று ரஷ்யா கூறிவருகிறது. இந்த பஞ்சாயத்துக்கு நடுவில்தான் இரு நாட்டின் முக்கிய தலைகள் தொலைப்பேசியில பேசியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைவர்கள் கடந்த ஆண்டு இதேபோல ஃபோனில் உரையாடினர். தற்போது ஓராண்டு கழித்து இரு தலைவர்களும் உரையாடியிருப்பது சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இந்த உரையாடல்கள் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், இதேபோன்ற பேச்சுவார்த்தையின் மூலம் போருக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
பின்னணி: சோவியத் ரஷ்யா இருந்த காலத்தில் அதற்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ரஷ்யாவுடன் அப்போது பல நாடுகள் இணைந்திருந்தன. எனவே, இதனை தடுக்கும் நோக்கிலும், தங்களுக்கு என புதிய ராணுவ கூட்டாளிகளை உருவாக்கும் நோக்கிலும் அமெரிக்கா நேட்டோவை உருவாக்கியது. ஆனால், சோவியத் வீழ்ந்து ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னமும் நேட்டோ கலைக்கப்படவில்லை. அதேபோல முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ தன்னுள் இழுத்து வருகிறது.
இது ரஷ்யாவுக்கு பெரும் தலைவலியை உருவாக்கிவிட்டது. அமெரிக்காவின் நேட்டோ படைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, உக்ரைன் பக்கம் வந்துவிட்டது. உக்ரைன் ரஷ்யாவின் அண்டை நாடு. இந்த நாட்டை நேட்டோவில் இணைத்துவிட்டால் அந்நாட்டின் எல்லையில் அமெரிக்கா படைகளை நிறுத்திக்கொள்ளலாம். இது ரஷ்யாவின் இறையான்மைக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடும். எனவே இது குறித்து ஏற்கெனவே புதின் எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கையை மீறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் இணைய ஒப்புக்கொண்டார். இந்த புள்ளிதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கம். 2022ல் தொடங்கிய போர் அடுத்த 6 மாதங்களில் முடிவடைந்து விடும் என்று ரஷ்ய நம்பியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உக்ரைனுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications