30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம்.. டிரம்ப் திட்டத்தை டீலில் விடும் புதின்? சூசகமாக ரஷ்யா சொன்ன மேட்டர்
நியூயார்க்: உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்தை உக்ரைன் நாடு ஏற்றுக்கொண்டது. இதேபோன்று ரஷ்யாவும் ஒத்துக்கொண்டால், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துவிடும். இதனால் தற்போது ரஷ்யா என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்று ஒட்டு மொத்த உலகமும் உன்னிப்பாக கவனிக்கும் நிலையில், டிரம்ப்பின் இந்த திட்டத்தை டீலில் விடும் வகையில் ரஷ்யா இதற்கு சூசகமாக பதில் அளித்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. குட்டி நாடான உக்ரைனை எளிதில் வீழ்த்திவிடலாம் என நினைத்த ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி அளித்ததால் ரஷ்யாவை வந்து பார் என எதிர்த்து நின்றது.

போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை
உக்ரைனில் சில இடங்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடிந்தாலும் கூட நினைத்த அளவுக்கு அந்த நாடால் முன்னேற முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்துக்கொண்டே சென்றதால் பொருளாதார பாதிப்பு என பல்வேறு சிக்கல்களும் எழுந்தன. 3 ஆண்டுகளை கடந்து நீண்டு வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அதே வேளையில் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளுக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக கடந்த மாதம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
உக்ரைன் அதிபர் சம்மதம்
அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா நிறுத்தியது. இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
அதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா - உக்ரைன் இடையே வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதில், "அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்தை உக்ரைன் ஏற்றது. இந்த போர் நிறுத்தக் காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம். இது ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டது.
ரஷ்யா சொல்வது என்ன
இதனால் தற்போது ரஷ்யா என்ன மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்று ஒட்டு மொத்த உலகமும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கியிருக்கிறது. இத்தகைய சூழலில் தான், ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமானவரான ரஷ்யாவின் உயர் அதிகாரி யுரி உஷாகோவ், 30 நாள் போர் நிறுத்தம் தொடர்பான முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- "உக்ரைன் ராணுவத்திற்கு தற்காலிகமாக இளைப்பாறுதல் கிடைக்கும் வகையில் தான் இந்த போர் நிறுத்த முன்மொழிவு இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;- இந்த விவகாரத்தில் புதின் உரிய மதிப்பீடுகளை செய்வார். ரஷ்யாவின் சட்டப்பூர்வ நலன்களை பாதுகாக்கும் வகையில் நீண்ட கால ஒரு அமைதி தீர்வைத்தான் ரஷ்யா நோக்கமாக கொண்டு இருக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்" என்றார். ரஷ்யாவின் உயர் அதிகாரி இவ்வாறு பேசியிருப்பதான் மூலம் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை அந்த நாடு ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வி வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications