இனி யாருக்கும் வழுக்கையே இருக்காது.. எலியை வைத்து நடத்திய சோதனையில் புதிய கண்டுபிடிப்பு!
நியூயார்க்: முடி உதிர்தல் என்பது பலருக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. இப்பிரச்னை குறித்து 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வில் தற்போது தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் போர், உக்ரைன் மீதான தாக்குதல், பெட்ரோல் விலை, நிரந்தர வேலையின்மை, பொருளாதார நெருக்கடி என பல பிரச்னைகள் இருந்தாலும், இன்றை இளைஞர்களை பெரிதும் வாட்டி வதைக்கும் விஷயம் முடி உதிர்தல்தான். மேற்குறிப்பிட்ட பஞ்சாயத்துகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும். ஆனால், முடி கொட்டினால் மீண்டும் முளைக்குமா? முளைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளாக 'மச்சம்' குறித்து ஆய்வு செய்து வந்திருக்கிறார்கள். இந்த ஆய்வில்தான் முடி உதிர்தலுக்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலில் ஏன் மச்சங்கள் தோன்றுகின்றன. மச்சம் என்ன வேலையை செய்கிறது? குறிப்பாக மச்சம் இருக்கும் இடத்தில் நீளமாக முடி வளர்கிறதே அது ஏன்? என்கிற கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
முடி உதிர்தல் என்றால் என்ன?: இது குறித்து விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கத்தை நேச்சர் இதழ் வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு சராசரியாக 50-100 முடிகள் உதிரும். பின்னர் தலையில் இருக்கும் ஸ்டெம் செல்கள் புதிய முடியை வளர்க்க உதவும். சிலருக்கு ஸ்டெம் செல்கள் செயலற்றதாக இருக்கும். இதனால் முடி வளராது. இதைதான் வழுக்கை என்று கூறுகிறோம். அறிவியல் இதை அலோபீசியா அல்லது ஆண்ட்ரோஜெனிக் என்று குறிப்பிடுகிறது.
ஆக முடியை மீண்டும் வளர்க்க, ஸ்டெம் செல்லை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த வேலையைதான் ஆஸ்டியோபொன்டின் என்ற மூலக்கூறு செய்கிறது. நமது மச்சத்தில் ஆஸ்டியோபொன்டின் மூலக்கூறு இருக்கிறது. இதனால்தான் மச்சத்திற்கு நடுவே முளைக்கும் முடிகள் நீளமாக இருக்கின்றன.
இதை ஆய்வு செய்ய, மனித தோலை வெட்டி எடுத்து அதை எலியின் உடலில் ஒட்டி, அந்த எலிக்கு ஆஸ்டியோபொன்டின் ஊசி மூலம் செலுத்தியுள்ளனர். சில நாட்களில் எலி உடலில் மனித தோல் இருந்த பகுதியில் புதியதாக முடிகள் 1 செ.மீ நீளம் வரை முளைத்திருக்கிறது.
இதே முறையை பின்பற்றி மனிதர்களுக்கும் முடியை வளர வைக்க முடியும். இளமை காலத்தில் வளர்ந்ததை போலவே முடி வளரும். அதாவது, இளமையில் சுருட்டை முடி இருந்தால், அதேமாதிரி இந்த சிகிச்சையின்போதும் முளைக்கும். ஆனால் இந்த ஆய்வை இதுவரை மனிதர்களிடையே நடத்தி பார்க்கவில்லை. இந்த ஆய்வு நடத்தப்பட்டால் இனி இந்த உலகத்தில் வழுக்கை எனும் பிரச்னையே இருக்காது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications