சாண்ட்விச்சில் அதிக மயோனைஸ்.. கோபத்தில் பெண் ஊழியரை சுட்டுக் கொன்ற நபர்.. அமெரிக்காவில் பயங்கரம்!
சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகமாக இருந்ததால் பெண் ஊழியரை வாடிக்கையாளர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் சாண்ட்விச்சில் அதிக அளவு மயோனைஸ் வைத்ததாகக் கூறி, உணவக பெண் ஊழியரை வாடிக்கையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளார் 36 வயது மதிக்கத்தக்க ஒருவர். சாண்ட்விச் ஆர்டர் செய்து விட்டு அதற்காக காத்திருந்த அவருக்கு, அங்கு பணிபுரியும் 26 வயது பிரிட்டானி மெக்கான் என்ற பெண் ஊழியர் உணவு பரிமாறியுள்ளார்.
அப்போது சாண்ட்விச்சில் அதிக மயோனைஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அதனைச் சாப்பிடாமல், மெக்கானுடன் சண்டையிட்டுள்ளார் அந்த வாடிக்கையாளர்.

சுட்டுக் கொலை
ஊழியருடன், வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைப் பார்த்து, கடையில் இருந்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் சமாதானப் படுத்த அவர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த வாடிக்கையாளர் மெக்கானை துப்பாக்கியால் கொலை செய்து விட்டார். அதனைத் தடுக்கச் சென்ற மற்றொரு ஊழியரையும் அவர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கைது
உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாடிக்கையாளரைக் கைது செய்தனர். காயமடைந்த மற்றொரு ஊழியர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயோனைஸுக்காக கொலையா?
போலீசாரின் விசாரணையில் கொலை செய்த வாடிக்கையாளரின் பெயர் மெல்வின் வில்லியம்ஸ் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்த உணவகத்தின் உரிமையாளர் வில்லி கூறுகையில், "நம்பினால் நம்புங்கள்.. சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகமாக இருந்ததற்காக இப்படி ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பகுதி நேர ஊழியர்
பிரேத பரிசோதனை அறிக்கையில் மெக்கான், துப்பாக்கிக் குண்டு பாய்ந்தே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மெக்கான் மற்றும் காயமடைந்த ஊழியர் என இருவருமே அந்த உணவகத்தில் பகுதி நேர ஊழியர்களாக இருந்துள்ளனர். சாண்ட்விச்சில் மயோனைஸ் அதிகமானதற்காக, உணவக ஊழியர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications