உக்ரைன் - ரஷ்யா போர்.. இன்று நல்ல செய்தி வருமா? புதினுக்கு போனை போடும் ட்ரம்ப்! ஜெலன்ஸ்கி விடுவாரா?
நியூயார்க்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதன் மூலம் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் போர் நீடிப்பதற்கு புதின் தான் காரணம் என குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
அமெரிக்க அதிபராக தான் பதவியேற்றால் உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் போரை நிறுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த மாதம் துபாயில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா முன் வைத்தது. அதனை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டாலும் ரஷ்யா ஏற்கவில்லை.
தொடர்ந்து பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்படும் என ரஷ்யாவுக்கு அமெரிக்காவும், ஜி 7 நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனை ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளரான ட்மிட்ரி பெஸ்கோவும் உறுதி செய்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்," கடந்த 16ஆம் தேதி போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் பேசி வருகிறோம். பதினெட்டாம் தேதிக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும். அன்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'
இந்த நிலையில் போர் தொடர்ந்து நடப்பதற்கு ரஷ்யா அதிபர் புதின் தான் காரணம் என குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. போர் தொடர்பான நிலைப்பாடுகள் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் தொலைபேசியில் பேசியதாக வீடியோ வெளியிட்டுள்ள அவர்," போரை புதின் தான் நீட்டித்து வருவதாகவும் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் யோசனைகள் ஒரு வாரமாக கிடப்பில் இருப்பதாக கூறியுள்ளார். போர் நிறுத்த யோசனைகள் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் உயிர்கள் பலியாகி வருகிறது" எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் போர்: நேட்டோ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 3 ஆண்டுகள் முடிந்து 4ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்த நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது. குறிப்பாக ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது. இதற்கிடையே கடந்த மாதம் 19ஆம் தேதி துபாயில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சரும், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சரும் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உக்ரைன் தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.
அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தங்கள் தரப்பை கேட்காமலேயே நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளை நிராகரிப்பதாக அதிரடியாக அறிவித்தார் ஜெலன்ஸ்கி. இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெலன்ஸ்கி அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஜெலன்ஸ்கி அங்கிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications