உக்ரைனுக்கு அமெரிக்கா ரூ.59,000 கோடி ராணுவ உதவி.. வரப்போகும் அதி நவீன ஆயுதங்கள் என்னென்ன தெரியுமா?
நியூயார்க்: ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் தங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பாயி நாடுகள், பிரிட்டன் ஆகியவை உதவி வந்த நிலையில் தற்போது மேலும் $725M அளவில் ராணுவ உதவியை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் மோதல் மேலும் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.
நெருங்கும் சட்டப்பேரவை கூட்டம்.. என்ன “பிளான்”? அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை - முக்கிய முடிவுகள்
சோவியத் யூனியன்
ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ஒரு காலத்தில் உலகின் சக்தி வாய்ந்த நாடாக இருந்தது சோவியத் யூனியன். அமெரிக்கா, பிரிட்டன் எல்லாம் இந்நாட்டுக்கு அடுத்த நிலையில் இருந்தன. இப்படி இருக்கும்போது 1991ம் ஆண்டு சோவியத் உடைந்தது. அதனுடன் ஒன்றியிருந்த நாடுகளெல்லாம் சுதந்திர நாடுகளாக உரிமை கோரி சென்றுவிட்டன. இப்படி போன நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். பார்க்க சிறியதாக இருந்தாலும், அது இயற்கை செழிப்புமிக்க நாடு.
வாக்கு
உலகிலேயே பெரியதாக இருக்கும் ரஷ்யாவின் உணவு தேவைகளை கணிசமான அளவு உக்ரைனில் விளையும் தானியங்கள்தான் பூர்த்தி செய்யும். இவ்வாறு இருக்கையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் சேர வேண்டும் என அமெரிக்கா தூண்டிவிட்டது. இதற்கு உக்ரைனும் சம்மதம் தெரிவிக்கையில், ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து போரில் குதித்தது. ஏனெனில் அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த சோவியத் யூனியன் உடையும் போது அமெரிக்கா ஒரு வாக்கு கொடுத்தது.
போர்
அதாவது மேற்கொண்டு இனி கிழக்கில் நேட்டோ விரிவடையாது என்பதுதான் அது. இப்படி இருக்கையில், அமெரிக்கா உசுப்பி விட, உக்ரைன் அதை நம்பி நேட்டோவில் சேர்வதாக ஒப்புக்கொள்ள சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அது போராக வெடித்தது. தொடர்ந்து 234வது நாளாக நடைபெற்று வரும் இந்த போரில் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் உக்ரைன் நிலப்பரப்பில் 15 சதவிகித நிலத்தை ரஷ்யா கைப்பற்றிக்கொண்டது.
பதிலடி
ஆனால் உக்ரைனை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கைவிடவில்லை. இதுவரை அமெரிக்கா சுமார் ரூ.12.5 லட்சம் கோடி அளவுக்கு உதவிகளை உக்ரைனுக்கு செய்திருக்கிறது. அதாவது ரஷ்யா ஓராண்டுக்கு தனது ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். எனவே உக்ரைன் பதில் தாக்குதல் நடத்த தற்போது போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
முக்கிய ஆயுதம்
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. கண்டனத்துடன் சுமார் ரூ.59 ஆயிரம் கோடி அளவிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்கா வழங்க இருப்பதாக தெரிவித்துள்ள ராணுவ உதவியில் HIMARS எனப்படும் முக்கிய ஆயுதம் இடம்பிடித்துள்ளது. HIMARS என்பது ராக்கெட் லாஞ்சர்களாகும். இதை வேண்டிய இடத்தில் கொண்டு செல்ல முடியும். கடந்த 24 மணி நேரத்தில் 80க்கும் அதிகமான ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா ஏவி இருந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஏவுகணை லாஞ்சர்
இதில் பாதியை உக்ரைன் இடைமறித்து அழித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இடைமறித்து தாக்குதல் நடத்துவதற்கும் HIMARS பயன்படும். இதைத் தொடர்ந்து NASAM (National Advanced Surface-to-Air Missile System) ஏவுகணை லாஞ்சர்களையும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளது. இது வெறும் ஏவுகணை லாஞ்சர் மட்டும்தான். இதில் ஏவுகணைகளை நிரப்பினால்தான் பயன்படுத்த முடியும். எனவே ஏவுகணைகளை பிரிட்டன் வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
சிறிய ரக பீரங்கிகள்
இங்கிலாந்து தனது பங்கிற்கு, நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும், ஹோவிட்சர் எனப்படும் சிறிய ரக பீரங்கிகளையும் வழங்க இருக்கிறது. ஜெர்மனி IRIS-T எனப்படும் ஏவுகணை லாஞ்சர்களை வழங்கியுள்ளது. உலக நாடுகள் பலவும் வான் பாதுகாப்பிற்கு இந்த ரக ஏவுகணை லாஞ்சர்களைதான் நம்பி இருக்கின்றன. அந்த அளவுக்கு இது திறமையான பாதுகாப்பு கவசம். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியுடன் சேர்ந்து நெதர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ராணுவ உதவிகளை செய்வதாக தெரிவித்திருக்கிறன.
ஆக இந்த மொத்த ஆயுதங்களின் தாக்குதல்களை எதிர்கொள்வது என்பது ரஷ்யாவுக்கு சவாலான ஒன்றாகவே இருக்கிறது.