டிரம்பின் முடிவால் இந்தியாவுக்கு புதிய சிக்கல்.. உயிர் பலி, நோய் பரவுதலை இனி தடுக்க முடியாது!
நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை நாங்கள் இனி முழுமையாக பயன்படுத்துவோம் என்று டிரம்ப் அறிவித்திருப்பது இந்தியாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
டிரம்ப்பின் அறிவிப்பு காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய உத்தரவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துதல் சம்பந்தமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் ஒன்று. 'திரவ தங்கத்தால்' அமெரிக்கா ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய டிரம்ப், தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்து 'தேசிய எரிசக்தி ஆதிக்க கவுன்சிலையும்'(National Energy Dominance Council) நிறுவினார்.
இந்த உத்தரவு இந்தியாவின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. அதாவது இன்றைய தேதியில் வளர்ந்த நாடுகள்தான் அதிக அளவு கார்பனை வெளியிடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் வெளியாகும் கார்பன் அளவில் 14 சதவிகிதத்தை அமெரிக்கா மட்டுமே வெளியிடுகிறது.
அதேபோல மற்ற பணக்கார நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கனடா, பிரான்ஸ் ஆகியவை சேர்ந்து 25% அளவுக்கு கார்பனை வெளியிடுகின்றன. இவையெல்லாம் வளர்ந்த நாடுகள். எனவே பெட்ரோல் டீசல் பயன்பாட்டை தவிர்த்துவிட்டு, காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம். இதில் செலவு அதிகம்தான். ஆனால், இவை பணக்கார நாடு என்பதால் சமாளித்துக்கொள்ளும். ஆனால், அமெரிக்கா இந்த ஐடியாவை ஏற்றுக்கொள்ளவில்லை.
நாங்கள் எண்ணெய்யை எடுத்து அதிக அளவுக்கு வெளியில் விற்போம் என டிரம்ப் கூறியுள்ளார். இதனால் கார்பன் வெளியீடு அதிகரித்து காலநிலை மாற்றம் ஏற்படும்.
காலநிலை மாற்றம் காரணமாக உலகம் வெப்பமாகும். இது பல பாதிப்புகளை உருவாக்கும். பாதிப்புகளுக்கு பலிகடாவாக இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான் இருக்கும்.
இந்தியாவில் விவசாயம் அதிகமாக நடக்கிறது. வேளாண் தொழிலை நம்பிதான் இந்தியா இருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் மோசமான வானிலை, வேளாண் தொழிலை அழித்துவிடும். திடீரென ஏற்படும் வெள்ளம், வறட்சி, பருவம் தவறிய மழை, அடிக்கடி மாறும் வானிலை, முன்கூட்டியே கணிக்க முடியாமல் போகும் இயற்கை நிகழ்வுகள் இவையெல்லாம் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும்.
சாதாரணமாக ஒரு புயல் வந்தாலே டெல்டா மாவட்டங்களில் உள்ள பயிர்கள் எல்லாம் நாசமாகிவிடுகின்றன. இதுவே ஒரு வருடத்திற்கு 2-3 புயல்கள் வந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள்.
மழை ஒருபக்கம் எனில், அதிக வெயில் மறுபக்கம் இருக்கும். இதனால் விவசாயம் பொய்த்து போகும். குடிநீருக்கு பிரச்சனை ஏற்படும். காலரா, டெங்கு போன்ற நோய்கள் எங்கு பார்த்தாலும் அதிகரித்து இருக்கும். கடல் நீர்மட்டம் அதிகரித்து, வெள்ள பாதிப்பு ஏற்படும். எனவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டு பஞ்சம் தலைவிரித்து ஆடும். கோடிக்கணக்கான மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம் பெயர்ந்து போவார்கள். நம்மை சுற்றி உள்ள பல்லுயிர்கள் அழிந்துவிடும்.
இந்தியாவால் இதனை நிச்சயம் சமாளிக்க முடியாது. எனவே அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும். டிரம்ப் தனது அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று சூழலியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications