கிரீன் சிக்னலா?.. காபூல் குண்டுவெடிப்பு கண்டனத்தில் தாலிபான் பெயரை நீக்கிய ஐநா பாதுகாப்பு கவுன்சில்!
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கண்டத்தில் தாலிபான்கள் என்ற வார்த்தை இடம்பெறாதது சர்வதேச அரசியலில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வியாழக்கிழமை அடுத்தடுத்து நான்கு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. விமான நிலையத்திற்கு வெளியே மக்கள் வரிசையில் காத்திருந்த இடங்களில் அடுத்தடுத்து நான்கு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன, இதில் மொத்தம் 169 பேர் பலியானார்கள். அமெரிக்க வீரர்கள் 13 பேர் பலியானார்கள்.
இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. உலக நாடுகளை இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்து வெறும் இரண்டே வாரத்தில் இவ்வளவு பெரிய மோசமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்ற போதே அதை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சாடி இருந்தது.

அவசரம்
இது தொடர்பாக ஆகஸ்ட் 16ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடத்தி இருந்தது. அந்த கூட்டத்தின் முடிவில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் வளருவதை அனுமதிக்க முடியாது. ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தீவிரவாதிகள் மற்ற நாடுகளை அச்சுறுத்துவதை அனுமதி முடியாது. ஆப்கான் மீண்டும் தீவிரவாதிகளின் சொர்க்கமாக மாறிவிட கூடாது. ஆப்கானிஸ்தானில் எந்த விதமான தீவிரவாத இயக்கத்தையும் தாலிபானோ அல்லது வேறு அமைப்புகளோ ஆதரிக்க கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் குறிப்பிட்டு இருந்தது. தீவிரவாதத்திற்கு ஆதரவாக தாலிபான் செயல்பட கூடாது என்று பொருள்படும் வகையில் இந்த அறிக்கை இடம்பெற்று இருந்தது.

ஆனால் மாற்றம்
இந்த நிலையில் காபூல் குண்டுவெடிப்பிற்கு பின் மீண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனையை தொடர்ந்து காபூல் குண்டுவெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டது. அதில், காபூல் குண்டுவெடிப்பிற்கு கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவிக்கிறோம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த கூடாது. ஆப்கான் மீண்டும் தீவிரவாதிகளின் சொர்க்கமாக மாறிவிட கூடாது. ஆப்கானிஸ்தானில் எந்த விதமான தீவிரவாத இயக்கத்தையும் யாரும் ஆதரிக்க கூடாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தனது அறிக்கையில் தாலிபான் என்ற வார்த்தையை நீக்கி உள்ளது. பழைய அறிக்கையில் "தீவிரவாதத்தை தாலிபான்கள் ஆதரிக்க கூடாது" என்பதை மாற்றி "எந்த இயக்கமும் தீவிரவாதத்தை ஆதரிக்க கூடாது" என்று புதிய அறிக்கையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

ஐநா கிரீன் சிக்னல்
ஐநாவிற்கு பாதுகாப்பு கவுன்சில் இப்படி தாலிபான் பெயரை நீக்கி இருப்பது, தாலிபான்களுக்கு கிடைத்திருக்க கூடிய முதல் சர்வதேச அங்கீகாரமாக மாறியுள்ளது. தாலிபான்களின் பெயரை கண்டனம் ஒன்றில் இருந்து ஐநா நீக்கி உள்ளது தாலிபான்களுக்கு கொடுக்கப்பட்ட கிரீன் சிக்னலாக மாறியுள்ளது. தாலிபான்களின் சமீபத்திய செயல்பாடுகள் காரணமாக ஐநா கொஞ்சம் இறங்கி வந்து இருக்கலாம் என்று சர்வதேச ஊடங்கங்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளது.

தாலிபான்கள்
முக்கியமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு மக்களை வெளியேற்ற தாலிபான்கள் உதவி செய்தது, அமெரிக்க மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவி செய்தது, காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களால் தற்போது தாலிபான்களின் மீதான மதிப்பு கொஞ்சம் லேசாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது தாலிபான்களின் பெயர் ஐநா கண்டனத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications