எரியும் நெருப்பில் எண்ணெய்.. இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி! போருக்கு தாராளம் காட்டும் அமெரிக்கா
நியூயார்க்: மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு உதவ மேலும் ரூ.1.41 லட்சம் கோடி நிதியை ஒதுக்க அமெரிக்கா முன்வந்திருக்கிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டுவரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இஸ்ரேல், உக்ரைன் என தன்னுடைய நட்பு நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா முன்வந்திருக்கிறது. நேற்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தங்களது நட்பு நாடுகளுக்கு ரூ.79 லட்சம் கோடியை நிதியுதவியாக அளிக்க அனுமதி கோரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பெரும்பான்மை ஆதரவு இருந்த நிலையில், தற்போது அந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும் இறுதி கட்ட ஒப்புதலுக்கு பிறகே இந்த நிதி விடுவிக்கப்படும்.

இதில் இஸ்ரேலுக்கு ரூ.1.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். தற்போதைய சூழலில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில், இஸ்ரேலுக்கு கூடுதலாக நிதி வழங்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கூறியுள்ளன.
இஸ்ரேல் தவிர உக்ரைனுக்கு ரூ.5 லட்சம் கோடி வழங்கப்பட இருக்கிறது. ரஷ்யாவுடனான மோதலை சமாளிக்க இந்த உதவி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் வெடித்தது. இந்த தாக்குதலை ஒரு வாரம் மட்டுமே நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால், தாக்குதல் தொடர்பான விஷயத்தை பிரிட்டனின் MI6 உளவு அமைப்பு மோப்பம் பிடித்துவிட்டது. எனவே, அமெரிக்காவை உஷார்படுத்தி உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்கியது. இதனால் போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications