அடுத்த 48 மணி நேரம்.. பிடனின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பென்சில்வேனியா.. டிரம்பின் பிளான் இதுதானா?!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான காலகட்டமாக மாறியுள்ளது. தற்போது வரை வெளியாகி இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 237 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இன்னொரு பக்கம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதில் பிடன் முன்னிலை வகித்தாலும் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் முடிவுகள் மாற்றம் அடையும். பதிவான 160 மில்லியன் வாக்குகளில் 101 மில்லியன் வாக்குகள் தபால் வாக்குகள்.. இதனால் மொத்தமாக வாக்கு எண்ணிக்கையை முடிக்க பல மணி நேரம் எடுக்கும்.
அமெரிக்க பிரநிதிகள் சபைக்கு தமிழரான பிரமீளா ஜெயபால் 3வது முறையாக தேர்வானார்
வெள்ளிக்கிழமை வரை வராது
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமான காலகட்டமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு வெள்ளிக்கிழமை வரை ஆகும். முக்கியமாக பென்சில்வேனியாவில் தபால் வாக்குகளை எண்ணி முடிக்க 48 மணி நேரம் ஆகும்.. இங்கு வரும் முடிவுகள் அதிபர் தேர்தலையே புரட்டி போடலாம்.
விதிதான் காரணம்
பென்சில்வேனியா உள்ளிட்ட இந்த மூன்று மாகாணங்களின் விதிப்படி.. தபால் வாக்குகளை தேர்தல் நாளில் எண்ண முடியாது. அதேபோல் தேர்தலுக்கு முன்பும் எண்ண முடியாது. இதனால் இந்திய நேரடி இன்று இரவில் இருந்து மட்டுமே இந்த மூன்று மாகாணங்களில் தபால் வாக்குகளை எண்ண முடியும். இதனால் மொத்தமாக தபால் வாக்குகளை எண்ணி முடிக்க 48 மணி நேரம் வரை ஆகும்.
ஏன் தடுத்தார்கள்
இங்கு தேர்தலுக்கு முன்பே தாபல் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பிடனின் ஜனநாயக கட்சி வைத்த இந்த கோரிக்கையை டிரம்ப்பின் குடியரசு கட்சி சட்ட போராட்டம் மூலம் முறியடித்தது. இதனால் தபால் வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடக்கவில்லை. மாறாக வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை வரை நடக்கும் என்கிறார்கள். இங்குதான் டிரம்ப் மிகப்பெரிய தந்திரத்தை செய்துள்ளார்.
தந்திரம்
இங்கு முன் கூட்டிய வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள கூடாது என்று தடை வாங்கிவிட்டு... தற்போது இந்த தபால் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பே.. தன்னை வெற்றியாளர் என்று அறிவித்துவிட்டார். அதோடு தபால் வாக்குகளை எண்ண கூடாது. நான் கோர்ட்டுக்கு செல்வேன் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் பிடனின் வெற்றியை தடுக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மொத்தமாக மாறும்
இந்த மூன்று மாகாணமும் ஜனநாயக கட்சி வாக்காளர்கள் அதிகம் உள்ள மாகாணம் ஆகும். மொத்தமாக மூன்று மாகாணத்தையும் சேர்த்து 46 வாக்குகள் இங்கு வரும். இந்த மூன்றிலும் பிடன் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது. பென்சில்வேனியா பிடனின் வெற்றியை உறுதி செய்ய வாய்ப்புள்ளது. இப்படி இருக்கையில் இங்கு முடிவுகள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்
இந்த தாமதத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னை வெற்றியாளராக அறிவித்துள்ளார் டிரம்ப். இதனால் மொத்தமாக முடிவுகள் வரும் போது அதை டிரம்ப் ஏற்றுக்கொள்ளாமல் சண்டை போட வாய்ப்புள்ளது. தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டது என்று சர்ச்சையை கிளப்ப வாய்ப்புள்ளது.